Thursday,December,08,2011இலங்கை: பெற்றோலியத் தொழிற்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் இன்று உரையாற்றவிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் சபையில் பிரசன்னமாகாததால் சபை நடவடிக்கைகள் உரிய நேரத்திற்கு முன்னரே முடிவிற்குக் கொண்டுவரப்பட்டன.
இந்தச் சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் அக்ராசனத்தில் அமர்ந்திருந்தார்.
இன்றைய தினம் விவாவத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடவிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவர்களில் பலர் சபையில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய பதில் உரையை நிகழ்த்துவதற்கான சந்தர்ப்பம் பெற்றோலிய தொழிற்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு வழங்கப்பட்டிருந்தது.
இன்றைய தினம் விவாதத்தின் போது எதிர்க்கட்சியினருக்கு 165 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் 60 நிமிடங்கள் மாத்திரமே பயன்படுத்தியுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சியினர் ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தி எத்தகைய கருத்துக்களை வெளியிட்டாலும் அவர்கள் பாராளுமன்ற செயற்பாடுகளில் கலந்துகொள்ள வேண்டியது முக்கியமென அமைச்சர் கூறினார்.
இதன் பிரகாரம் பெற்றோலிய தொழிற்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டது.
இன்றைய தினம் சபை நடவடிக்கைகளை ஒத்தி வைப்பதற்கான பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க சமர்ப்பிக்கவிருந்தார்.
இதற்கமைய அக்ராசனத்தினால் சபை நடவடிக்கைகளை ஒத்தி வைப்பது தொடர்பான பிரேரணையை சமர்ப்பிக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்ட போதிலும் ரவி கருணாநாயக்க அங்கு இருக்காததால் சபை நடவடிக்கைகள் உரிய நேரத்திற்கு முன்னரே முடிவிற்குக் கொண்டுவரப்பட்டன.
No comments:
Post a Comment