Sunday, December 11, 2011இலங்கை::சரத் பொன்சேகாவை முன்னாள் இராணுவத் தளபதி என அழைக்க முடியாது என இராணுவப் பேச்சாளர் நிஹால் ஹப்புவாரச்சி தெரிவித்துள்ளார்.
புலிகளுக்கு எதிரான யுத்தம் தொடர்பான இலங்கை வரலாறு மீள எழுதப்பட்டுள்ளதாகவும், இதில் சரத் பொன்சேகாவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகாவை சர்வதேச மற்றும் உள்ளுர் ஊடகங்கள் முன்னாள் இராணுவத் தளபதி என குறிப்பிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
உண்மையில் சரத் பொன்சேகாவை முன்னாள் இராணுவத் தளபதியாகக் கூட கருத முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவ இணைய தளத்தில் காணப்படும் முன்னாள் இராணுவத் தளபதிகள் தொடர்பான வரலாற்று பக்கத்தில் சரத் பொன்சேகாவின் பெயர் அகற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இராணுவ நீதிமன்றம் விதித்த தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகாவை முன்னாள் இராணுவத் தளபதியாக அரசாங்க ஊடகங்கள் குறிப்பிடக் கூடாது என இராணுவப் பேச்சாளர் ஹப்புவாரச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோர மாட்டார் என அவரது புதல்வி அபர்னா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தந்தையை விடுதலை செய்வதற்காக அமெரிக்க அரசாங்கத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிக்கைக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைக்கும் நோக்கில் கையொப்பங்கள் திரட்டப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் 12000 கையொப்பங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் 23ம் திகதிக்கு முன்னதாக 25000 கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளதாகவும் அபர்னா குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் தமது தந்தையை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை நாட நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment