Sunday, December 4, 2011

யாழ்ப்பாணம் சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்கள் நாளை விடுதலை?: 5-வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தம் நீடிப்பு!

Sunday, December 04, 2011
ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து கடந்த 28-ந்தேதி மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் பிரசாத், அகஸ்டஸ், வில்சன், லாங்லெட், எமர்சன் ஆகியோரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

அவர்கள் மீது போதை பொருள் கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ராமேசுவரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்தும், அவர்களை உடனே விடுதலை செய்யக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இன்று அவர்கள் 5-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் ஆயிரக்கணக்கான மீனவ குடும்பத்தினர் பட்டினியால் உள்ளனர்.

இதற்கிடையில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 5 பேரையும் நாளை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அதன் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படலாம் என்று தெரிகிறது.

கைது செய்யப்பட்ட 5 மீனவர்களையும் நாளை விடுதலை செய்யப்படாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்த போவதாக ராமேசுவரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment