Tuesday, December 6, 2011

முற்றுகிறது முல்லை பெரியாறு பிரச்னை இடுக்கியில் 144 தடை: ஐயப்ப பக்தர்கள் பீதி!

Tuesday, December 06, 2011
கூடலூர் : முல்லை பெரியாறு சர்ச்சையில் தமிழக - கேரள எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளதால், இடுக்கியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் கேரளா செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேனியில் பீதியுடன் தங்கியுள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்க ஐஜி தலைமையில் 5 எஸ்.பி.க்கள், ஏராளமான போலீசார் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். முல்லை பெரியாறு அணை விவகாரம் தமிழக தென் மாவட்டங்களிலும், கேரளாவிலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள இளைஞர் காங்கிரஸ், மாநில பாஜவினர் பெரியாறு அணையை இடிக்க முயன்றது தமிழகத்தில் கொந்தளிப்பை அதிகப்படுத்தி உள்ளது.

கேரளாவில் தமிழக வாகனங்களை அடித்து நொறுக்கியதாலும், டிரைவர்களை தாக்கியதாலும், கம்பம், கூடலூரில் நேற்று மக்கள் போராட்டத்தில் குதித்தனர். கூடலூரில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். கேரள முதல்வர் உம்மன்சாண்டியின் உருவ பொம்மையை 50க்கும் அதிகமான இடங்களில் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நூற்றுக்கணக்கான பைக்குகளில் கம்பம் நகர் முழுவதும் இளைஞர்கள் வலம் வந்து கேரளாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். கேரளா செல்ல முயன்ற பஸ்கள் மறிக்கப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன. பள்ளிகளுக்கு நேற்று மதியம் முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பதற்றம் அதிகரித்ததை அடுத்து தமிழக - கேரள எல்லையில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு பகுதிகளில் நேற்று கேரள போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இதனால், தமிழகத்துக்கு உட்பட்ட கம்பம், கூடலு£ர் பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழக அதிரடிப் படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேனி கலெக்டர் பழனிச்சாமி, தென்மண்டல ஐஜி ராஜேஷ்தாஸ், திண்டுக்கல் எஸ்பி ஜெயச்சந்திரன், மதுரை சிறப்பு அதிரடிப் படை எஸ்பி ஈஸ்வரன், நெல்லை எஸ்பி விஜேந்திர பிதரி, விருதுநகர் எஸ்பி நஜ்மல் ஹோடா, ராமநாதபுரம் எஸ்பி காளிராஜ் மகேஷ்குமார் ஆகியோர் கம்பத்தில் முகாமிட்டுள்ளனர் தமிழகத்தில் இருந்து சென்ற ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டதால் நேற்று முதல் ஐயப்ப பக்தர்கள் யாரும் கேரளா செல்ல அனுமதிக்கப்படவில்லை. கேரளாவிலும் ஐயப்ப பக்தர்களை நுழைய விடாமல் தடுத்து வருகின்றனர். இதனால் நேற்று காலை முதல் சபரிமலை செல்ல சாரை சாரையாக வந்த ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை வத்தலக்குண்டு, தேவதானப்பட்டி, பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி, சின்னமனூர், பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலேயே போலீசார் மறித்து நிறுத்தி விட்டனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் 2 நாட்களாக கம்பம், கூடலூர் பகுதியில் தவித்து வருகின்றனர். இன்றும் அதே நிலை நீடித்தது. கம்பம், கூடலூர் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டதால் உணவு கிடைக்காமல் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். பல வாகனங்கள் தேனிக்கு திரும்பி கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் ஏற்கனவே சபரிமலை சென்ற ஆயிரக்கணக்கான தமிழக பக்தர்களும் திரும்பி வர முடியாமல் கேரளாவில் தவித்து வருகின்றனர். தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை தாக்குவதால், பம்பை பகுதியை விட்டு வெளியில் வர டிரைவர்கள் அச்சப்படுகின்றனர். கேரளாவுக்கு செல்ல முடியாததால் பழநி கோயிலில் கூட்டம் அதிகரித்துள்ளது. பாளையம், தேவாரம், பெரியகுளம், சின்னமனூர், வீரபாண்டி என ஏராளமான ஊர்களில் உம்மன்சாண்டியின் உருவபொம்மையை இன்று மக்கள் தீயிட்டு கொளுத்தினர். போராட்டம் தீவிரமடைந்து வருவதால் தேனி மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநில எல்லையில் வஜ்ரா, தீயணைப்பு வாகனங்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உத்தமபாளையம் டிஎஸ்பி ஸ்டாலின் தலைமையில் விடிய விடிய நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

கேரள நிதி நிறுவனங்கள் ஓட்டல்கள் மீது தாக்குதல்

தேனி மாவட்டம் தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், ராயப்பன்பட்டி பகுதிகளில் இருந்து நேற்றுமுன்தினம் கேரளாவுக்கு தொழிலாளர்களை ஏற்றி சென்ற நூற்றுக்கும் அதிகமான ஜீப்களை சிறை பிடித்து ஒரு கும்பல் தாக்கியது. தொழிலாளர்கள் நடந்தே கம்பம் மெட்டு வந்து சேர்ந்தனர். இத்தகவல் பரவியதும் ஆத்திரம் அடைந்த மக்கள் கம்பம், சின்னமனூர் உள்ளிட்ட இடங்களில் கேரள வாகனங்கள் அனைத்தையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேவாரம், கம்பம் உள்ளிட்ட இடங்களில் கேரளத்தை சேர்ந்த சிலர் நிதி நிறுவனங்கள், ஓட்டல்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்களை தாக்கிய பொதுமக்கள் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், கேரள அரசின் அத்துமீறல்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் பேச்சுக்கு பின்னர் சிறைபிடிக்கப்பட்ட சில ஜீப்கள் மட்டும் விடுவிக்கப்பட்டன...

தமிழக - கேரள எல்லையில் பதற்றம் : போலீசார் குவிப்பு!

மதுரை: முல்லைப் பெரியாறு அணை பிரச்னை காரணமாக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் தமிழக - கேரள எல்லையில் பதற்றமான நிலை
காணப்படுகிறது. தமிழக – கேரள எல்லையில் பதற்றம் நிலவுவதால் கம்பம் பகுதியில் 5 எஸ்.பி.க்கள் தலைமையில் 600 போலீசார், கூடுதலாகக்
குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமையை உன்னிப்பாய் கண்காணிக்க, வட்டார நிர்வாக அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தேனி மாவட்ட எல்லையான கம்பம் மெட்டு,போடி மெட்டு,குமுளி மெட்டு ஆகிய 3 சோதனை சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார்
பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். கம்பம், உத்தமபாளையம், பகுதிகளில் போராட்டம் நடத்த, தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு மதுக்கடைகள்
அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தமிழக எல்லையோரப் பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதனால், கடைகள், சிறுவணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டிருப்பதுடன், போக்குவரத்தும் படிப்படியாக சீரடைந்து வருகிறது. கேரளாவுக்கு காய்கறிகள் ஏற்றி
சென்ற லாரிகள், டெம்போ வேன்கள் மற்றும் பஸ்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இரு சக்கர வாகனங்கள், ஐயப்ப பக்தர்கள் செல்லும் பேருந்துகள், வேன்கள் தடுக்கப்பட்டன.

இதனிடையே கேரளாவில் இருந்து வந்த வாகனங்களை தமிழகத்திற்குள் நுழைய விடாமலும் தடுத்தனர். இதனால் அங்கே பதற்றமான சூழல்
ஏற்பட்டது.போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதேபோல் கேரள மாநிலத்தவர் தமிழக வாகனங்களை நுழைய விடாமல் தடுத்துள்ளனர்.
இதனால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment