சிறிலங்காவின் கொலைக்களம் மற்றும் புலிகள் சுட்டுக் கொல்லப்படுவதாக வெளியிட்ட காணொளியும் பொய்யானவை-உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிப்பு!


Monday, November 21, 2011போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை இராணுவத்தினர், தாம் கைது செய்த புலிகளை விசாரணை ஏதுமின்றிச் சுட்டுக் கொன்றார்கள் எனவும் பொதுமக்களின் இருப்பிடங்கள் மருத்துவமனைகள் என்பவற்றின் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினார்கள் எனவும் குற்றஞ்சாட்டி 'சனல்4' தொலைக்காட்சி வெளியிட்ட 'சிறிலங்காவின் கொலைக்களம்' ஆவணப்படத்திலும் அதன் பின்னர் புலிகள் சுட்டுக் கொல்லப்படுவதாக அது வெளியிட்ட மற்றொரு காணொளியும் முற்றிலும் போலியானவை என நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வந்த விசாரணைகளின் இறுதி அறிக்கையை நேற்று மகிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தது. அலரி மாளிகையில் மாலையில் நடைபெற்ற நிகழ்வில் ஆணைக்குழுவின் தலைவரும் முன்னாள் நீதியரசருமான சி.ஆர்.டி.சில்வா அறிக்கையைக் கையளித்தார்.
அந்த அறிக்கையில், போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றிருக்கக் கூடிய சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆணைக்குழு பெற்ற தகவல்களை அடிப்படையில் விசாரணை நடத்துவதற்குத் தேவையான அடிப்படைச் சான்றுகள் இருப்பதால், இறுதிப் போரில் இடம்பெற்ற குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் விசாரணை செய்யப்படவேண்டிய சம்பவங்கள் குறித்தோ, அவற்றுக்குப் பொறுப்பானவர்கள் யார் என்றோ எவரது பெயரையும் ஆணைக்குழு குறிப்பிடவில்லை.
400 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், இலங்கை இராணுவத்தினர் படுகொலைகளை மேற்கொண்டனர் என கூறும் 'சனல்4' தொலைக்காட்சி வெளியிட்ட காணொலி முற்றிலும் போலியானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment