Thursday, November 03, 2011இலங்கை அரசு வழங்கிய கடுமையான இராஜதந்திர அழுத்தத்தையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீமூனுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் நடைபெறவிருந்த சந்திப்பு நடைபெற வில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து, ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் அந்தஸ்திலுள்ள உயரதிகாரியான லிங்க் பாஸ்கோவைச் சந்தித்த தமிழ்க் கூட்டமைப்பினர் அவருடன் பேச்சுகளை நடத்திய பின்னர் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான மகஜர் ஒன்றையும் கையளித்திருக்கின்றனர்.
முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐ.நா. செயலாளர் நாயகத்தை சந்தித்துப் பேசுவதற்குப் பூர்வாங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக கனடாவுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்றுமுன்தினம் ஐ.நா. செயலாளர் நாயகத்தை சந்திப்பதற்காக மீண்டும் அமெரிக்காவிற்கு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்,; சென்றனர். ஆனால், தவிர்க்க முடியாத காரணத்தால் இந்தச் சந்திப்பு நடைபெறமாட்டாதென கூட்டமைப்பினருக்கு ஐ.நா. செயலாளர் நாயகம் அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனையடுத்தே ஐ.நா. சபையில் அரசியல்துறைக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் லிங்க் பாஸ் கோவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐ.நா.செயலாளர் நாயகத்தைச் சந்திக்கும் விடயத்தில் இலங்கை அரசு வழங்கிய கடும் அழுத்தமே இதற்கான காரணமென்று நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment