Thursday, November 17, 2011

வெள்ளை மாளிகை மீது துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் கைது!.

Thursday, November 17, 2011
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வெள்ளை மாளிகை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகை அருகில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9.40 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 8.10 மணி) திடீரென துப்பாக்கிச் சூடு நடந்தது. கமாண்டோக்கள் விரைந்து சென்று சோதனை நடத்தினர். மாளிகை அருகே உள்ள சாலையில் அனாதையாக ஒரு வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் ஏ.கே.47 ரக துப்பாக்கி இருந்தது. அவற்றை வீரர்கள் கைப்பற்றினர்.

மேலும், 16வது ஸ்டீரிட் மற்றும் சட்டத் துறை அலுவலக பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த உளவுத் துறை அதிகாரிகளும், துப்பாக்கிச் சூடு நடக்கும் சத்தத்தை கேட்டனர். அத்துடன் மர்ம நபர்கள் வெள்ளை மாளிகையின் மேற்கு பக்கம் நோக்கி 2 வாகனங்கள் வேகமாக சென்றதையும் கவனித்துள்ளனர்.
ஆனால், வெள்ளை மாளிகை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்தனர்.

இந்நிலையில், மாளிகையின் ஒரு கண்ணாடியில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருப்பதும், தோட்டத்தில் ஒரு துப்பாக்கி குண்டு விழுந்து கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பரபரப்பு அடைந்த அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் 2 நாட்களாக யாரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் பென்சில்வேனியாவில் ஆஸ்கார் ஆர்டெகா என்ற 21 வயது வாலிபரை பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று சுற்றிவளைத்தனர். அவரிடம் பென்சில்வேனியா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment