Tuesday, November 22, 2011

சர்வதேச விசாரணைகளுக்கு அவசியமில்லை – உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு!

Tuesday, November 22, 2011
யுத்தக் குற்றச் செயல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை என உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பயங்கரவாதிகள் பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இராணுவ முன்நகர்வுகளை நிறுத்துமாறு எந்தவொரு நாடும் கோரிக்கை விடுக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளது.

இவ்வாறு யுத்தத்தை இடைநடுவில் நிறுத்துவதன் மூலம் பயங்கரவாதிகள் மேலும் வலுவடையக் கூடிய ஆபத்து காணப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளது. பொதுமக்கள் நிலைகள் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்துவதனை சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் ஏற்றுக்கொள்ளாத போதிலும், மனிதாபிமான மீட்பு முயற்சிகளை தடை செய்யவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீ.ஆர். டி சில்வா தலைமையிலான எட்டு பேர் அடங்கிய ஆணைக்குழுவினர் கடந்த 20ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் 388 பக்கங்களை உடைய இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

கடத்தல்கள் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்களினால் ஆணைக்குழுவிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டதன் பின்னர் காணாமல் போனதாக உறவினர்களினால் செய்யப்பட்ட முறைப்பாடுகளை அரசாங்கம் உதாசீனம் செய்யக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்படுதனை சில உறவினர்கள் நேரில் கண்டதாக செய்யப்பட்ட முறைப்பாடுகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பொதுமக்கள் காணாமல் போகும் சம்பவங்களுடன் அரசாங்கத்திற்கு தொடர்பு கிடையாது என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

சில அரசியல்வாதிகள் சுயலாப நோக்கங்களுக்காக தேசிய அரசியலில் பாதக நிலைமைகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.

நாட்டின் சகல இன சமூகங்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எந்தவொரு பாகத்திலும் காணிகளை கொள்வனவு செய்வதற்கு சகல பிரஜைகளுக்கும் உரிமை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத ஆயுதங்களை களைவதற்கு மெய்யான அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையை மும்மொழி நாடாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த மொழிப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாது 2002ம் ஆண்டில் ஆட்சியாளர்கள் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு;ளளதாகவும், இது தவறான ஓர் செயற்பாடு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவசரமாக சட்ட மூலங்களை அரசாங்கம் நிறைவேற்றக் கூடாது எனவும், சகல சந்தர்ப்பங்களிலும் உச்ச நீதிமன்றின் அனுமதியுடன் மட்டும் சட்ட மூலங்களை நிறைவேற்ற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது குறித்தும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

நாட்டின் உள்விவகாரப் பிரச்சினைக்கு சர்வதேச ரீதியான தீர்வுத் திட்டம் அவசியமில்லை எனவும், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் உரிய முறையில் தகவல்களை வழங்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

யுத்தத்தின் பின்னர் மற்றும் யுத்த காலத்தில் ஈ.பி.டி.பி.யின் செயற்பாடுகள் குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அமைச்சர் சரியான விளக்கங்களை அளிக்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment