Wednesday, November 9, 2011

மாலைதீவில் நடைபெறவுள்ள சார்க் உச்சிமாநாட்டில் றொபேட் ஓ பிளேக் தலைமையிலான குழுவொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது!

Wednesday, November 09, 2011
மாலைதீவில் நடைபெறவுள்ள சார்க் உச்சிமாநாட்டில் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் தலைமையிலான குழுவொன்றும் பங்கேற்கவுள்ளது.இதன்போது, அங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை றொபேட் ஓ பிளேக் சந்தித்துப் பேசவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அட்டு நகரில் எதிர்வரும் 10 ஆம், 11 ஆம் நாள்களில் 17 ஆவது சார்க் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.இந்த மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மாலைதீவு ஆகிய 8 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.இந்த மாநாட்டில் பார்வையாளராகக் கலந்துகொள்ளவுள்ள அமெரிக்கக் குழுவுக்கு அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் தலைமையேற்கவுள்ளார்.

சார்க் மாநாட்டில் பங்கேற்கவுள்ள றொபேட் ஓ பிளேக், மாலைதீவில் எதிர்வரும் 13 ஆம் திகதிவரை தங்கியிருப்பார் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்கும் அமெரிக்க குழுவில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியாவும் இடம்பெறவுள்ளார்.இந்த மாநாட்டில் பங்கேற்கும் தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் விரிவான பேச்சுகளை நடத்தவுள்ளனர் எனவும் இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் சந்தித்துப் பேசவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன்போது, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, அதனை விரைவில் பகிரங்கப்படுத்துவது, அறிக்கையின் பரிந்துரைகளின் மீதான மேல் நடவடிக்கைகள் குறித்து அவர், ஜனாதிபதி மஹிந்தவிடம் வலியுறுத்தவுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment