Tuesday, November 29, 2011

யசூசி அக்காஷிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 7 பேர் அடங்கிய குழுவிற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது!

Tuesday, November 29, 2011
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அக்காஷிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 7 பேர் அடங்கிய குழுவிற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று முற்பகல் 11.30 தொடக்கம் 12.30 மணிவரை மதியபோசனத்துடன் கூடிய சந்திப்பாக இது அமைந்ததென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில்,

இன்றைய அரசியல் சூழ்நிலை, யுத்தம் முடிந்தும் இதுவரை தீர்வு முன்வைக்கப்படாமை, தமிழ் மக்களுக்கு தீர்வை முன்வைப்பதில் அரசாங்கம் அக்கரையின்றி செயற்படுகிறன்றமை, வடக்கு, கிழக்கு சிங்களமயமாக்கப்படுதல், இராணுவமயமாக்கப்படுதல், அரசின் செயற்பாடுகள் அனைத்தும் புரிந்துணர்வுக்கு எதிராகக் காணப்படுகின்றமை´ உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து முறையிடப்பட்டதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்களை செவிமெடுத்த யசூசி அக்காஷி, யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் தீர்வு ஒன்றை முன்வைப்பதற்கு அரசாங்கத்திற்கு சரியான சந்தர்ப்பம் வந்துள்ளதெனத் தெரிவித்ததாகவும் அதனை அரசாங்கம் கைவிடக் கூடாது என்ற நிலைப்பாட்டில் தாம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியல் தீர்வு விடயத்தில் விரைந்து செயற்பட வேண்டியமை குறித்து தான் சந்திக்கவுள்ள அரச அமைச்சர்கள் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகளுக்கு வலியுறுத்தவுள்ளதாகவும் யசூசி அக்காஷி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.

மேலும் சுமுகமான அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் தாம் தெளிவாக இருப்பதாகவும் அக்காஷி கூறியுள்ளார்.

இந்த சந்திப்பு மிகவும் திருப்திகரமானதாக அமைந்ததென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இன்றை சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், பொன்.செல்வராசா, அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment