Monday, November 21, 2011அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் இன்று பிற்பகல் 1.50யிற்கு பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளார்.
நாளை முதல் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் ஆரம்பமாகவுள்ளது. வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஏழு நாட்கள் நடைபெறவுள்ளதுடன் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
டிசம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் குழுநிலை விவாதங்கள் இடம்பெறவுள்ளன. இதற்காக 17 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை 21அமைச்சுக்கள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகம் தம்மிக்க திசாநாயக்க குறிப்பிட்டார்.
இந்த தெரிவுக் குழுவின் தலைவராக சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா செயற்படவுள்ளார் இந்த தெரிவுக் குழுவில் 21 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்டுள்ள 21 அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து ஆராய்வதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும் காலப்பகுதியான நவம்பர் 22 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை இந்த குழுவினர் கூடி ஆராயவுள்ளனர்.
குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் தயாரிக்கப்படும் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2012 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தினூடாக எட்டு வீத பொருளாதார வளர்ச்சியை பேணுவதற்கும் பணவீக்கத்தை ஆறு தொடக்கம் ஏழு வீதமாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கும் அரசாங்கம் எதிர்ப்பர்த்துள்ளது.
No comments:
Post a Comment