Monday, October 31, 2011

நீதிமன்ற அறிவித்தலை புறக்கணித்த பிரதிவாதிகளை பிரத்தியோகமாக ஆஜராகுமாறு உத்தரவு!

Monday, October 31, 2011
மேல் மாகாணத்தில் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் முறையான வேலைத்திட்டம் தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலை புறக்கணித்ததாக கூறப்படும் பிரதிவாதிகளை, நீதிமன்றத்தில் பிரத்தியோகமாக ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சமூக நியாயங்களுக்கான கேந்திர நிலையத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏழாவது முறையாகவும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சந்தர்ப்பத்தில் மேல் மாகாண மேல் நீதிமன்றத்தில் நீதவான் டப்ளியூ.எம். ரி.பி.வாரவெவ இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மேல் மாகாணத்தில் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவதற்காக முறையான வேலைத்திட்டத்தை சமர்ப்பிக்குமாறு பிரதிவாதிகளுக்கு கட்டளை பிறப்பிக்குமாறு கோரி கடந்த வருடம் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனை மக்கள் நலன்கருதிய மனுவாக எடுத்துக்கொண்ட நீதிமன்றம், பாரம்பரிய நீதிமன்ற நடைமுறைகளின் பிரகாரம், மனு மீதான விசாரணைக்கு நீண்ட காலம் செலவிடுவது அநாவசியமாகும் என சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய வெள்ளப் பெருக்கினைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை சமர்ப்பிக்குமாறு, இதற்கு முன்னர் பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனினும் கடந்த பத்து மாதங்களாக இதற்கு எதிர்மனு தாக்கல் செய்வதற்காக கால அவகாசம் கோரி, நீதிமன்ற உத்தரவை பிரதிவாதிகள் புறக்கணித்துள்ளனர்.

எதிர்மனு தாக்கல் செய்வதற்காக பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி இன்றைய தினம் நீதிமன்றத்தில் மீண்டும் கால அவகாசம் கோரியதை அடுத்து நீதவானின் விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளனர்.

இதன் பிரகாரம் இடர் முகாமைத்துவ அமைச்சர், மேல் மாகாண சுற்றாடல் அமைச்சர், கொழும்பு நகர மேயர், காணி நிரப்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஆகியோரை டிசம்பர் 29 அம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று உத்தரவிடப்பட்டது.

No comments:

Post a Comment