Tuesday, October 11, 2011

ஐரோப்பிய வங்கிகளின் மூலதனம் அதிகரிப்பு:பிரான்ஸ், ஜெர்மனி அதிபர்கள் உறுதி!

Tuesday, October 11, 2011
பெர்லின்:"ஐரோப்பாவின் "யூரோ' மண்டல கடன் நெருக்கடிக்கு விரைவில் ஒருங்கிணைந்த தீர்வு காணப்படும். அதன் ஒருபடியாக, நிதி நெருக்கடியில் தவிக்கும் ஐரோப்பிய வங்கிகளில் மூலதனம் அதிகரிக்கப்படும்' என பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி அதிபர்கள் அறிவித்துள்ளனர்."யூரோ' மண்டல கடன் நெருக்கடிக்கு இதுவரை தீர்வு எதுவும் காணப்படாத நிலையில், அடுத்த மாதம் முதல் வாரத்தில், பிரான்சின் கேன்ஸ் நகரில் ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாடு நடக்க உள்ளது. இம்மாநாட்டிற்கு முன்பாக, கடன் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என பிரான்ஸ் கருதுகிறது.

இந்நிலையில், கடந்த இருநாட்களாக, பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி மற்றும் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் இருவரும் தொடர்ந்து ஆலோசனை நடத்தினர்.கருத்து வேறுபாடு: "யூரோ' மண்டலக் கடன் நெருக்கடியின் ஒரு பகுதியாக, வங்கிகள் திவாலாவதைத் தடுப்பது குறித்து இருவரும் ஆலோசித்தனர். ஐரோப்பிய நிலைத்த நிதி அமைப்பின் (இ.எப்.எஸ்.எப்.,) பணத்தை வங்கிகளுக்கு அளிக்கலாம் என, பிரான்ஸ் அதிபர் யோசனை தெரிவித்தார். ஆனால், அந்த யோசனை இறுதிக் கட்டத்தில்தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஜெர்மனி அதிபர் உறுதியாக இருந்தார்.இம்மாத இறுதியில்... இறுதியில் நேற்று இருவரும் இணைந்து அளித்த பேட்டியில்,"இரு நாடுகளும் ஐரோப்பிய வங்கிகளின் மூலதனத்தை அதிகரிப்பதில் உறுதியாக உள்ளன. அதுகுறித்த தகவல்களில் சில தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதால், விவரங்கள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும்' எனத் தெரிவித்தனர்.கிரீஸ் கடன் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான ஆதரவைத் தொடர்ந்து அளிப்பதாகவும் இருவரும் உறுதியளித்தனர்.

எவ்வளவு தொகை? ஐரோப்பிய வங்கிகளில் மூலதனத்தை அதிகரிப்பதற்கு தற்போது, 200 பில்லியன் யூரோ ( ஒரு பில்லியன் - 100 கோடி; ஒரு யூரோ - ரூ.65 ) தேவைப்படும் என, சர்வதேச நிதியமைப்பு (ஐ.எம்.எப்.,) தெரிவித்துள்ளது.இக்கணக்கு தவறு எனக் கூறியுள்ள ஐரோப்பிய யூனியன், வங்கிகளுக்கிடையிலான கடன், தொழில் அமைப்புகளுக்கு வங்கிகள் அளிக்கும் கடன் ஆகிய நடவடிக்கைகள், வங்கிகளை திவாலாக்கிவிடும் என எச்சரித்துள்ளது.இதற்கிடையில், "யூரோ' மண்டல கடன் நெருக்கடியால், திவாலாகும் நிலையில் உள்ள "டெக்சியா' வங்கிக்கு, பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகள் இணைந்து நிதியுதவி அளிக்கத் திட்டமிட்டுள்ளன.

No comments:

Post a Comment