Sunday, October 9, 2011

சூடு பிடிக்கிறது உள்ளாட்சி தேர்தல் : திருச்சியில் ஜெ., கருணாநிதி!

Sunday, October 09, 2011
திருச்சி: தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திருச்சியில் மேயர் வேட்பாளர் மற்றும் திருச்சி மேற்கு இடைத்தேர்தல் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி முதல்வர் ஜெயலலிதா இன்றும் திமுக தலைவர் கருணாநிதி நாளையும் பிரசாரம் செய்கின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தலைவர்களும் உச்சகட்ட பிரசாரத்தில் இறங்கியுள்ளதால் உள்ளாட்சி தேர்தல் களம் களைகட்டியுள்ளது.

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் 1.32 லட்சம் பதவிகளுக்கு வரும் 17, 19-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்பட 10 மாநகராட்சிகளிலும் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் 15-ம் தேதி மாலையுடன் முடிகிறது. 6 நாட்களே உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திறந்த வேனில் சென்றும் வீடு வீடாக சென்றும் வாக்கு திரட்டி வருகின்றனர்.
இதற்கிடையில், அதிமுக அமைச்சர் மரியம் பிச்சை மரணம் இறந்ததால் திருச்சி மேற்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஓட்டுப் பதிவு வரும் 13-ம் தேதி நடக்கிறது. அதற்கான பிரசாரத்துக்கு 2 நாள் அவகாசம் மட்டுமே உள்ளதால் பல கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் முற்றுகையிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். திருச்சி மேற்கு தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாகவும் திருச்சி மேயர் வேட்பாளர் விஜயா செல்வராஜ் மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு ஆதரவு திரட்டி முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

இந்நிலையில், திருச்சி மேற்கு அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி மற்றும் மேயர் வேட்பாளர் ஜெயா ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை 5.30-க்கு தனி விமானத்தில் திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள், கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து வேனில் புறப்படும் முதல்வர் மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே பிரசாரத்தை தொடங்குகிறார். புத்தூர், உறையூர், தென்னூர் உள்பட 7 இடங்களில் வேனில் இருந்துபடி பிரசாரம் செய்கிறார். பின்னர் விமான நிலையம் சென்று தனி விமானத்தில் சென்னை திரும்புகிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்து, மத்திய மண்டல ஐஜி மஹாலி, டிஐஜி அமல்ராஜ் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி மேற்கு வேட்பாளர் நேரு மற்றும் மேயர், கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய திமுக தலைவர் மு.கருணாநிதி நாளை காலை ரயில் மூலம் திருச்சி வருகிறார். திருச்சி சங்கம் ஓட்டலில் தங்கும் அவர் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மாலை 6 மணிக்கு திருச்சி புத்தூர் 4 ரோடு பகுதியில் நடக்கும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நேருவுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்கிறார். மாநகராட்சி மேயர், கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டி பேசுகிறார். ரயில் நிலையத்தில் கருணாநிதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க மாவட்ட திமுக சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஜி.கே.வாசன், தங்கபாலு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொது செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், சமக தலைவர் சரத்குமார் உள்ளிட்ட தலைவர்களும் உச்சகட்ட பிரசாரத்தில் இறங்கியுள்ளதால் உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்துள்ளது. தலைவர்கள் வருகையால் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment