Monday, October 10, 2011

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது!.

Monday, October 10, 2011
திருச்சி: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் முடிவடைகிறது. வேட்பாளர்கள் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். திமுக வேட்பாளர் நேருவை ஆதரித்து இன்று மாலை நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கட்சித் தலைவர் கருணாநிதி பேசுகிறார். திருச்சி மேற்கு சட்டசபை தொகுதிக்கு வரும் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அதிமுக சார்பில் பரஞ்சோதி உள்பட 16 பேர் களத்தில் உள்ளனர். தேமுதிக, பாமக, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிடவில்லை.

தொகுதியில் மொத்தம் 240 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை என கருதப்பட்டு, அங்கு வெப் கேமரா பொருத்தப்பட உள்ளது. வாக்குப்பதிவுக்கு 276 மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் மற்றும் விதிமீறல்களை கண்காணிக்கும் பணியில் 3 மத்திய பார்வையாளர்கள் உள்பட தேர்தல் கமிஷன் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு பணிக்காக மத்திய போலீஸ் படையும் வந்துள்ளது.

மேலும், திருச்சி மாநகராட்சிக்கு வரும் 17-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலையொட்டி திருச்சியில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், வைத்தியலிங்கம், செந்தில் பாலாஜி, சிவபதி உள்பட 16 அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திருச்சியில் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, செல்வராஜ், அழகு திருநாவுக்கரசு, செல்வகணபதி, மற்றும் ஏகேஎஸ் விஜயன் உள்ளிட்ட நிர்வாகிகள் திருச்சியில் முகாமிட்டு, நேருவுக்காக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் முடிகிறது. இதையடுத்து, வேட்பாளர்களும் கட்சித் தலைவர்களும் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா, திருச்சியில் நேற்று பிரசாரம் செய்தார். திமுக பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின், நேற்று முன்தினம் திருச்சியில் பிரசாரம் மேற்கொண்டார். இன்றும் நாளையும் அவர் இங்கு வாக்கு சேகரிக்கிறார்.

திமுக வேட்பாளர் கே.என்.நேரு மற்றும் மாநகராட்சி மேயர், கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்து புத்தூர் நான்கு சாலையில் இன்று மாலை பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் கருணாநிதி, சென்னையில் இருந்து மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை 5.50 மணிக்கு திருச்சி வந்தார். ஜங்ஷனில் அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் சங்கம் ஓட்டலுக்கு சென்ற கருணாநிதி, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாலையில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரும் திருச்சியில் இன்று பிரசாரம் செய்கின்றனர். தலைவர்கள் வருகையால் திருச்சி மேற்கு தொகுதியில் பிரசாரம் களைகட்டியுள்ளது.

காத்திருந்த கருணாநிதி

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கருப்பு பூனைப்படை பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இன்று காலை திருச்சி வந்த அவரை வரவேற்க ஜங்ஷனில் தொண்டர்கள் காத்திருந்தனர். காலை 5.50 மணிக்கு ரயில் திருச்சிக்கு வந்தது. தொண்டர்கள், பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால், சுமார் 20 போலீசார் மட்டுமே அங்கு பாதுகாப்புக்கு இருந்தனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து 20 நிமிடம் வரை கருணாநிதி ரயிலிலேயே காத்திருந்தார். பின்னர் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, கூட்டத்தை ஒழுங்குபடுத்திய பிறகே கருணாநிதி ரயிலில் இருந்து இறங்கி சென்றார்.

No comments:

Post a Comment