Friday, September 16, 2011

Friday, September 16, 2011
காஷ்மீருக்குள் மட்டும் தான் இந்தியாவுக்கு ஊடுருவல் இருப்பதாகக் கருதக் கூடாது, நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்தும், இந்தியாவுக்குள் ஊடுருவல் சம்பவங்கள் நடக்கின்றன-மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம்!

Friday,September,16,2011
புதுடில்லி: "இந்தியாவுக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட அச்சுறுத்தல்கள் உள்ளன. இவற்றைச் சமாளிக்க வேண்டுமானால், போதிய கால அவகாசம், நிதி, மனிதவளம், தொழில்நுட்பம் ஆகிய வசதிகள் தேவை' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசினார். அனைத்து மாநில டி.ஜி.பி.,க்கள் மற்றும் ஐ.ஜி.,க்கள் பங்கேற்ற மாநாடு, டில்லியில் நேற்று நடந்தது.

இதில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது: கடந்த இரண்டு மாத இடைவெளியில், மும்பை, டில்லி என, இரண்டு இடங்களில், பயங்கரவாதிகளால் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இது, அரசின் சாதனையில், கறையை ஏற்படுத்தி விட்டது. நமக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அச்சுறுத்தல்கள் உள்ளன. இந்த பல்முனை அச்சுறுத்தல்களைச் சமாளிக்க, நமது திறனை மேம்படுத்த வேண்டும். இதற்கு, போதிய கால அவகாசம், நிதி, மனிதவளம், தொழில்நுட்ப வசதிகள் தேவைப்படுகின்றன.

பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் மட்டும் தான், நமக்கு ஊடுருவல் இருப்பதாகக் கருதக் கூடாது. நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்தும், இந்தியாவுக்குள் ஊடுருவல் சம்பவங்கள் நடக்கின்றன. இதைச் சமாளிக்க, புலனாய்வு அமைப்புகளும், அனைத்து மாநில போலீசாரும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சமீபகாலமாக, புலனாய்வு அமைப்புகளால், பல்வேறு பயங்கரவாதச் சம்பவங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. ஓ.என்.ஜி.சி.,யில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தவர்கள், கடந்தாண்டு மார்ச்சில் கைது செய்யப்பட்டனர். பன்னாட்டு நிறுவனத்தின் மீது, மிகப் பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பயங்கரவாதிகளின் முயற்சியும் முறியடிக்கப்பட்டது. அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய, மூன்று நீதிபதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த, "சிமி' பயங்கரவாதிகளின் முயற்சியும், கடந்த ஜூனில் முறியடிக்கப்பட்டது.

ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில், நக்சலைட்களின் வன்முறை இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. மேற்கு வங்கத்தில், மாவோயிஸ்ட்கள், கொரில்லா முகாம்களை உருவாக்கி வருவதாகவும், புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்தியாவில், இடதுசாரி பயங்கரவாதம் பெரும் வன்முறை இயக்கமாக உள்ளது. அந்த பயங்கரவாதத்தைக் கையாள, பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள், பல பிரச்னைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கும். இதில், இன்னும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். வடகிழக்கு மாநிலங்களில், வன்முறைச் சம்பவங்கள், கடத்தல் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. எனவே, அங்கு பாதுகாப்புப் படையினரை, அதிக அளவில் ஈடுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, சிதம்பரம் பேசினார்.

No comments:

Post a Comment