Friday, September 16, 2011

புலிகளின் ஆதரவாளர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு குந்தகம்:தூக்குதண்டனைக் கைதிகளின் மனுவை சென்னையில் விசாரிக்கக்கூடாது:இந்திய உச்சநீதிமன்றில் விசாரனை மாற்ற வேண்டும் என்று கோரி, மூப்பனார் பேரவையின் தலைவர் எல்.கே. வெங்கட் என்பவர் மனுத்தாக்கல்!

Friday, September 16, 2011
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து மாற்றக் கோரும் மனு தொடர்பான விசாரனை இன்று இந்திய உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் மத்திய அரசு, தமிழக அரசு, சிறைத்துறை ஐஜி மற்றும் சம்பந்தப்பட்ட கைதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப இந்திய உச்சநீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மனுத்தாரரின் கோரிக்கை தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் எச்.எல். தத்து ஆகியோர் கொண்ட உச்சநீதிமன்ற நீதியரசர்கள் குழு உத்தரவிட்டுள்ளது.

அந்த மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கோ அல்லது வேறு மாநில உயர் நீதிமன்றத்துக்கோ மாற்ற வேண்டும் எனக் கோரி மூப்பனார் பேரவையின் தலைவர் எல்.கே. வெங்கட் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்த நிலையில் அவர்களை செப்டம்பர் 9-ம் தேதி தூக்கிலிட தகதி குறிக்கப்பட்டது.

அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தால் விசாரணையை சுதந்திரமான சூழ்நிலையில் நடத்த முடியாது. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பி நீதிமன்ற நடவடிக்கைக்கு குந்தகம் ஏற்படுத்துவார்கள் என மனுத்தாரர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

தங்களது கருணை மனுக்கள் 11 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டதாலும், 20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்திருப்பதாலும், தங்களைத் தூக்கிலிடுவது நியாயமில்லை எனக் கூறி மூவரின் சார்பிலும் மனுத்தாககல் செய்யப்பட்டது.

அதையடுத்து அவர்களது தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்த சென்னை உயர்நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

கடந்த ஆகஸ்ட் 30-ம் திகதி தூக்கு தண்டனை கைதிகளின் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சுமார் 5 ஆயிரம் பேர் உயர்நீதிமன்ற வளாகத்தில் திரண்டு விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தினார்கள் எனவும், தூக்கு தண்டனைக்கு நீதிமன்றம் தடை விதித்தவுடன் நீதிமன்றதுக்கு உள்ளும் வெளியிலும் மகிழ்ச்சிக் கோஷங்கள் எழுப்பப்பட்டன என்றும் மனுதாரர் தனது மனுவில் சுட்டிக் காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment