Wednesday, September 21, 2011

ஆண்டிபட்டி கோர்ட்டில் ஆஜராக நடிகை குஷ்புவுக்கு ஐகோர்ட் உத்தரவு!.

Wednesday, September 21, 2011
மதுரை: சட்டசபை தேர்தலின்போது அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆண்டிபட்டி கோர்ட்டில் ஆஜராக நடிகை குஷ்புவுக்கு ஐகோர்ட் மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு பிரசாரம் செய்தார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் பழனிச்செட்டிபட்டி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது அனுமதி பெறாமல் பிரசாரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. இதன் பேரில் குஷ்பு உள்பட 9 பேர் மீது ஆண்டிபட்டி போலீசாரும், குஷ்பு உள்பட 3 பேர் மீது பழனிசெட்டிபட்டி போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் குஷ்பு தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி மாலா முன்னிலையில் இன்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ராமர் ஆஜராகி, ஆண்டிபட்டியில் அனுமதி பெறாமல் தேர்தல் பிரசாரம் செய்த வழக்கில் குஷ்பு உள்பட 9 பேர் மீதும் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது, என்றார். ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், ஆண்டிபட்டி கோர்ட்டில் குஷ்பு சரண் அடைந்து ஜாமீனில் செல்லலாம் என்றும் பழனிசெட்டிபட்டி வழக்கில் முன்ஜாமீன் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment