Tuesday, September 13, 2011

கொள்ளையர்கள் தாக்குதல்: நடிகை விசித்திராவின் தந்தை படுகொலை; தாய் படுகாயம்; நகைகள் கொள்ளை!

Tuesday, September 13, 2011
தமிழ்த் திரை உலகில் ஏராளமான படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்திருப்பவர் நடிகை விசித்ரா. இவரது தந்தை வில்லியம்ஸ் (70), தாய் வசந்தா (65). நடிகை விசித்ராவுக்கு சென்னை அடுத்த சுங்கு வார்சத்திரம் அருகில் செல்லம்பட்டறை என்ற கிராமத்தில் பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டில் விசித்ராவின் பெற்றோர் தங்கியுள்ளனர்.

நடிகை விசித்ரா தனக்கு ஓய்வு கிடைக்கும் நாட்களில், இந்த பண்ணை வீட்டுக்கு சென்று, பெற்றோருடன் இருந்து விட்டு வருவார். கடந்த வாரம் அவர் அந்த வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று இரவு வீட்டில் விசித்ராவின் பெற்றோர் மட்டும் தனியாக இருந்தனர். இன்று (செவ்வாய்) அதிகாலை 3 மணியளவில் அந்த பண்ணை வீட்டின் சிமண்ட் ஜாலியிலான ஜன்னலை உடைத்துக் கொண்டு 2 மர்ம மனிதர்கள் உள்ளே புகுந்தனர். அவர்கள் இரு வரும் முகமூடி அணிந்திருந்தனர். அவர்கள் இருவரும் நகை, பணம் வைக்கப்பட்டிருந்த பீரோ எங்கு உள்ளது என்று வீட்டுக்குள் தேடினார்கள்.

சத்தம் கேட்டு விழித்தெழுந்த விசித்ராவின் தந்தை வில்லியம்ஸ் யார் அது? என்று குரல் கொடுத்தார். முகமூடி கொள்ளையர்கள் இருவரும் உடனே படுக்கை அறைக்கு சென்று வில்லியம்சை சத்தம் போடக்கூடாது என்று மிரட்டினார்கள். பிறகு நகைகளை எடுத்து தரும்படி கொள்ளையர்கள் கூறினார்கள். ஆனால் வில்லியம்ஸ் அவர்களை திடீரென தாக்கத் தொடங்கினார். இதனால் கோபம் அடைந்த கொள்ளையர்கள் வில்லியம்ஸ் தலையில் அரிவாளால் வெட்டினார்கள். அலறியபடி வில்லியம்ஸ் கீழே சாய்ந்தார்.

படுக்கை அறைக்குள்ளேயே அவர் பிணமானார். நடிகை விசித்ராவின் தாய் வசந்தா கண் எதிரிலேயே வில்லியம்ஸ் கொல்லப்பட்டார். இதை கண்டு நடுங்கிய வசந்தாவும் கூச்சலிட்டார். உடனே கொள்ளையர்கள் வசந்தாவை தாக்கினார்கள். படுகாயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். அதன் பிறகு கொள்ளையர்கள் அந்த பண்ணை வீட்டின் எல்லா அறைகளுக்கும் சென்று விலை உயர்ந்த பொருட்களை சுருட்டினார்கள்.

பீரோவை உடைத்து 30 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர். மேலும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் எடுத்துக் கொண்டனர். வெள்ளி பாத்திரங்கள், பட்டு புடவை களையும் மூட்டையாக கட்டி எடுத்துச் சென்று விட்டனர்.

தப்பிச் செல்லும் அவசரத்தில் அவர்கள் அந்த பண்ணை வீட்டின் கதவை பூட்டாமல் ஓடி விட்டனர். கொள்ளை போன நகைகள், பணத்தின் மதிப்பு ரூ. 7 லட்சம் இருக்கும். நடிகை விசித்ராவின் பண்ணை வீட்டில் காசியம்மாள் என்பவர் வேலைக் காரியாக உள்ளார். இவர் காலையில் வந்து வீட்டை சுத்தம் செய்து, சமையல் செய்து கொடுத்து விட்டு செல்வது வழக்கம்.

இன்று காலை 9 மணிக்கு அவர் வழக்கம் போல வேலைக்கு வந்தார். கதவு திறந்து கிடப்பது கண்டு யோசித்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். படுக்கை அறைக்குள் வில்லியம்ஸ் ரத்தம் வழிந்தோட பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மற்றொரு அறையில் வசந்தா மயக்கம் தெளிந்து உயிருக்குப் போராடி கொண்டிருப்பதை பார்த்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் அக்கம்-பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

இதற்கிடையே இந்த கொலை, கொள்ளை குறித்து அறிந்த ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கஜேந்திரகுமார், இன்ஸ் பெக்டர் கோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வில்லியம்ஸ் பிணத்தை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அரசு மருத் துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

வசந்தா மீட்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். வசந்தாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் போலீசாரிடம் தெரிவித்த தகவல்கள் மூலம்தான் முகமூடி கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்கப்பட்டு வருகிறது. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. அந்த இடத்தில் முகமூடி கொள்ளையர்கள் காரில் ஏறி தப்பி சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

நள்ளிரவு வீடு புகுந்து இப்படி கைவரிசை காட்டுவது பெரும்பாலும் ஆந்திரா கொள்ளையர்கள்தான். காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பண்ணை வீடுகளில் அவர்கள் குறி வைத்து தாக்குவதுண்டு. நடிகை விசித்ராவின் பண்ணை வீட்டில் கை வரிசை காட்டியதும் ஆந்திரா கொள்ளையர்களா? என்று விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே முன் விரோதம் ஏதாவது காரணமாக கொலை, கொள்ளை நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

No comments:

Post a Comment