Thursday, September 15, 2011

இலவச லேப்டாப், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, ஆடு, மாடு சிறப்பு திட்டங்களை முதல்வர் தொடங்கினார்!.

Thursday,September 15,2011
திருவள்ளூர்: ஏழைகளுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குவது, ஏழை விவசாயிகளுக்கு ஆடு, மாடு; மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் உதவித் தொகை வழங்கும் சிறப்பு திட்டங்களை திருவள்ளூரில் முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். சட்டசபை தேர்தலின்போது பெண்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, விவசாயிகளுக்கு ஆடு, மாடு, மாணவர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் இலவசமாக வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதும் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி இந்த புதிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, அரசின் இலவச திட்டங்கள் தொடக்க விழா, இன்று காலை 11 மணிக்கு திருவள்ளூரில் நடந்தது. திருவள்ளூர் - காக்களூர் சாலையில் உள்ள பள்ளி மைதானத்தில் நடந்த விழாவில் பங்கேற்க முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம், காலை 10.45 மணியளவில் வந்தார். அவரை சபாநாயகர் ஜெயக்குமார் மற்றும் அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். விழா மேடைக்கு சென்ற ஜெயலலிதா, கூட்டத்தினரை பார்த்து வணக்கம் தெரிவித்து கை அசைத்தார்.

இதையடுத்து விழா தொடங்கியது. சபாநாயகர் டி.ஜெயக்குமார் தலைமை வகித்தார். கைத்தறி துறை அமைச்சர் பி.வி.ரமணா முன்னிலை வகித்தார். தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி வரவேற்றார். அமைச்சர்கள் பன்னீர்செல்வம், செங்கோட்டையன், எம்.சி.சம்பத், என்.ஆர்.சிவபதி, டாக்டர் வேணுகோபால் எம்.பி., மணிமாறன் எம்எல்ஏ ஆகியோர் வாழ்த்தி பேசினர். பெண்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து கிராமபுற ஏழை குடும்பங்களுக்கு கறவை மாடு மற்றும் தலா 4 ஆடுகள், மாணவர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர், 10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு உதவித் தொகை வழங்கும் திட்டங்களையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

பின்னர் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மாணவர்களுக்கு லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தேன். அதன்படி, தினம் ஒரு திட்டம் அறிவித்து அதை நிறைவேற்றி வருகிறேன். மக்களுக்கு வழங்கப்படும் இதுபோன்ற பொருட்களை இலவசம் என்று கூறி கொச்சைப்படுத்துகின்றனர். ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று அவர்களது சொந்த காலில் நின்று பொருளாதாரத்தில் ஏற்றம் பெற வழங்கப்படுவதுதான் இந்த திட்டங்கள்.

ஏழைகளுக்கு வழங்கப்படும் பசு மாடுகளால் அவர்களது குடும்பத்தில் பொருளாதாரம் உயரும். மாநிலத்தின் பால் உற்பத்தி வெகுவாக அதிகரிக்கும். இதேபோன்று ஆடு வழங்கும் திட்டத்தில் ஏழ்மையிலும் ஏழ்மையாக உள்ளவர்களே சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களும் ஏழ்மையில் இருந்து விடுபட்டு பொருளாதாரத்தில் ஏற்றம் பெற இந்த திட்டம் உதவும். இலவச திட்டங்கள் ஏழை மக்களை கைதூக்கி விடும் இனிய திட்டமாகும். ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் பொருளாதாரத்தில் சொந்த காலில் அவர்கள் நிற்கும் நிலை ஏற்படும்.

‘ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்’ என்று சிலர் ஏழை மக்களை கொச்சைப்படுத்தினர். அவர்தான் தற்போது என்னுடைய ஒவ்வொரு செயலுக்கும் குற்றம் கண்டுபிடிக்க முயன்று தினம் ஒரு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். சட்டசபையில், பாராட்டு பெறுவதற்காக 110 விதியின் கீழ் நான் தினமும் ஒரு அறிக்கையை வெளியிடுவதாக அவர் கூறியுள்ளார். அதன்மூலம் நான் வெளியிடும் அறிவிப்புகள் எல்லாம் மக்கள் நலன் பயக்கும் பாராட்டு பெறக்கூடிய அறிவிப்புகள் என்று தன்னை அறியாமலே திமுக தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஒவ்வொரு திட்டத்தையும் குறை கூறி அறிக்கை விட்டு, திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்பதை நினைவுபடுத்தி கொண்டிருக்கிறார்கள். ஒரு மாநிலம் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் மனிதவள மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதனால்தான் மாணவ, மாணவிகள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரூ.1,500, ரூ.2,000 ஊக்கத் தொகையாக வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறேன். இதனால் நலிந்த குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் மேல்நிலை படிப்பை தொடர முடியும்.

அதேபோன்று, லேப்டாப் வழங்கும் திட்டமும் இன்று தொடங்கப்படுகிறது. மாணவர்கள் லேப்டாப் பெறுவதன் மூலம் ஒரு புதிய உலகத்திற்கு அவர்களை அழைத்து செல்லும் தலைவாசலாக அமையும். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவிகள் மற்ற மாநில மாணவர்களைவிட கல்வியில் சிறந்து விளங்குவார்கள். இல்லத்தரசிகளின் இன்னல் தீர்க்கும் இன்னொரு முத்தான திட்டம்தான் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம். இதன் மூலம் சமையல் அறையில் உள்ள பெண்களின் வேலை பளுவும் நேரமும் வெகுவாக குறையும்.

வசதி பெற்றவர்கள் குளிர்சாதன வசதியை ஏற்படுத்தி கொள்ளும்போது அந்த வசதியை பெற இயலாத சாமானிய மக்கள் மின்விசிறி பெறுவது நியாயமானதே ஆகும். எனது தலைமையிலான அரசு பொருளாதார வளர்ச்சிக்கும், மனிதவள மேம்பாட்டுக்கும், தனி மனிதனின் அத்தியாவசிய தேவைக்கும் பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. நீங்கள் அனைவரும் திட்டங்களின் பயன்களை பெற்று உங்கள் வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் திருவள்ளூர் மாவட்டம் சார்பில் அமைச்சர் பி.வி.ரமணா, டாக்டர் வேணுகோபால் எம்பி, மணிமாறன் எம்எல்ஏ ஆகியோர் முதல்வருக்கு நினைவுப் பரிசு வழங்கினர். அதிமுக மாநில இளைஞரணி இணை செயலாளர் செவ்வை எம்.சம்பத்குமார், திருவள்ளூர் ஒன்றிய செயலாளர்கள் புட்லூர் ஆர்.சந்திரசேகர், கே.சுதாகர், கந்தசாமி, ரவிச்சந்திரன், திருத்தணி சவுந்தர்ராஜன், பள்ளிப்பட்டு சீனிவாசன், வி.என்.கண்டிகை ரவி, நிர்வாகிகள் தண்ணீர்குளம் ஏழுமலை, கே.ஹென்றி, ஏ.பி.கேசவன், பி.ஜெய பால், சி.என்.ராமர், குமாரி பாலசந்தர், வக்கீல்கள் விஜயகுமார், புட்லூர் சி.செந்தில், பெருவை சி.சேகர், கமாண்டோ ஏ.பாஸ்கரன், நகர இளைஞரணி செயலாளர் வக்கீல் எஸ்.வேல்முருகன், கடம்பத்தூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் வலசை இரா.சந்திரசேகரன், வலசை பெருமாள், ஊராட்சி மன்ற தலைவர்கள் பத்மாவதி சந்திரசேகர், காக்களூர் மு.அரி, வி.எஸ்.குபேரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய பாலமும் பரிசும் ஜெ. சொன்ன கதை!

விழாவில் முதல்வர் ஜெயலலிதா சொன்ன கதை ஒரு ஊரில் புதிதாக பாலம் கட்டினர். அதை அமைச்சர் திறந்து வைத்தார். அந்த பாலத்தில் 100-வதாக வரும் வாகன ஓட்டுனருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர். 100-வதாக வந்த காரை நிறுத்தி, அதை ஓட்டி வந்தவரிடம் ரூ.10 ஆயிரம் கொடுத்தனர். அவர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனார்.

இந்த பணத்தை என்ன செய்யப் போகிறீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ‘முதலில் டிரைவிங் லைசன்ஸ் வாங்க வேண்டும்’ என்று கூறினார். லைசன்சே இல்லாமல்தான் காரை ஓட்டி வந்தாரா என அதிகாரிகளும், பத்திரிகையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். காருக்குள் இருந்த அவரது மனைவி நிலைமையை சமாளிக்க நினைத்து, ‘அவர் சொல்வதை நம்பாதீர்கள். அவர் குடிபோதையில் உளறுவார்’’ என்றார்.

இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது காருக்குள் இருந்த அவரது தந்தை, ‘‘இதுக்குதான் அப்பவே சொன்னேன், திருட்டு காரை அதிகாரிகள் இருக்கும் இடத்துக்கு ஓட்டிச் செல்லாதே என்று. இப்போது மாட்டிக்கிட்டு முழிக்கிறான்’’ என்றார். இது திருட்டு கார் வேறயா என்று அதிகாரிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் மயக்கமே வந்துவிட்டது. இப்படித்தான் ஒரு சிலர் வாயை கொடுத்து வாங்கி கட்டிக் கொண்ட கதையாக ஒவ்வொரு திட்டத்தையும் குறை கூறி அறிக்கை விடுகின்றனர். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

மிக்சி, கிரைண்டர் மின்விசிறி ரூ.5,444

விழாவில் 475 பயனாளிகளுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.25 லட்சத்து 85 ஆயிரத்து 900 ஆயிரம். ஒவ்வொரு பயனாளிக்கும் மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி மூன்றும் மொத்தமாக வழங்கப்பட்டது. மூன்றின் மதிப்பு ரூ.5 ஆயிரத்து 444. அதேபோல 119 மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது. ஒரு லேப்டாப்பின் மதிப்பு ரூ.14 ஆயிரத்து 071. மொத்த மதிப்பு ரூ.16 லட்சத்து 74 ஆயிரத்து 449

50 பேருக்கு தலா ரூ.36 ஆயிரம் மதிப்பில் கறவை மாடுகள் வழங்கப்பட்டது. மொத்த மதிப்பு ரூ.18 லட்சம். மேலும் 32 பேருக்கு ரூ.4 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் தலா 4 ஆடுகள் வழங்கப்பட்டது. 4 ஆடுகளின் விலை ரூ.13 ஆயிரம். மொத்தம் 1,211 பேருக்கு ரூ.73 லட்சத்து 50 ஆயிரத்து 849 மதிப்பீட்டில் சிறப்பு திட்டங்கள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment