Wednesday, September 28, 2011இறுதிப் போர் நடைபெற்ற காலப் பகுதியில் பாதுகாப்பு வலயமாக அரசால் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஷெல் தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையில் பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக், பாதுகாப்புச் செயலர் கோதாபயவைத் தொடர்புகொண்டு கூறினார்.
அதற்கு கோத்தா 'காலநிலை சீரின்மையால் இரண்டு நாள்கள் ஜெட் போர் விமானங்கள் பறக்கவில்லையே' என்று ஏளனமாகப் பதிலளித்துள்ளார் என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
யுத்த காலப்பகுதியில் அமெரிக்கத் தூதுவராகக் கொழும்பில் இருந்த பிளேக் இதுபற்றி வாஷிங்டனில் உள்ள இராஜாங்கத்திணைக்களம் மற்றும் தூதரகங்களுக்கு 2009 மார்ச் 12 ஆம் திகதி அனுப்பி வைத்துள்ள தகவல் குறிப்பிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விக்கிலீக்ஸ் ஆவணத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
2009 மார்ச் 10 ஆம் திகதி பாதுகாப்பு வலயத்தில் பலத்த ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐ.நா அறிக்கை கூறுவதாகவும், இதில் 124 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 254 பேர் காயமுற்றதாகவும் ஐ.நா பிரதிநிதி தமக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து 2009 மார்ச் 12ஆம் திகதி பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவைச் சந்தித்து, பொதுமக்கள் தங்கியுள்ள பாதுகாப்பு வலயம் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று பலமுறை வலியுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.விடுதலைப் புலிகளின் பீரங்கி நிலைகள் இருந்தாலும் கூட ஷெல் தாக்குதலை நடத்த வேண்டாம் என்றும் கோத்தபாய ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொண்டதாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.அதற்கு கோத்தபாய ராஜபக்ஷ, சீரற்ற காலநிலையால் இரண்டு நாள்களாக ஜெட் விமானங்கள் பறக்கவில்லையே என்று தொடர்பில்லாமல், ஏளனமாகப் பதிலளித்ததுடன் பொதுமக்கள் கொல்லப்பட்டனரா என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியதாகவும் விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.
No comments:
Post a Comment