Friday, September 16, 2011

இந்திய ராணுவ பதுங்கு குழிகள் மீது சீன ராணுவம் ஹெலிகாப்டர்கள் மூலம் குண்டுவீச்சு!

Friday,September,16,2011
லே: காஷ்மீரின் லடாக் பகுதியில் லே மாவட்டத்தில் இந்தியாவுக்குள் அத்துமீறி ஊடுருவிய சீன ராணுவத்தினர் இந்திய ராணுவத்தின் பதுங்கு குழிகள், கூடாரங்களை குண்டுகளை வீசி தாக்கி அழித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலிக்கு ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியுள்ளது சீன ராணுவம்.

கடந்த மாதமே இந்தத் தாக்குதல் நடந்தாலும், அதை மத்திய அரசு மூடி மறைத்துவிட்டது. ஆனால், இப்போது இந்த விஷயம் வெளியி்ல் கசிந்துவிட்டது.

லே பகுதியில் இருந்து 300 கிமீ தூரத்தில் உள்ள சுமர் பகுதிக்குள் சீன ராணுவத்தினர் ஹெலிகாப்டர்களில் நுழைந்து இந்திய ராணுவத்தின் பதுங்கு குழிகள் மீது குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்திய வான் பகுதிக்குள் சுமார் 1.5 கிமீ வரை அவர்கள் ஊடுருவி வந்து தாக்குதலை நடத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

ஆனால், சுமர் பகுதியில் சீன ராணுவம் நுழைந்தது என்ற தகவலை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததாகத் தகவலே இல்லை என்று ராணுவத்தின் வடக்கு மண்டலச் செய்தித் தொடர்பாளர் கர்னல் ரஜேஷ் கலியா கூறியுள்ளார்.

அதே நேரத்தில் இந்திய ராணுவம் பயன்படுத்தாக சில பதுங்கு குழிகளைத் தான் சீன ராணுவம் தாக்கி அழி்த்ததாகக் கூறப்படுகிறது.

2009ம் ஆண்டு இதே பகுதியில் தான் சீன ராணுவத்தினர் நுழைந்து அங்குள்ள பாறைகளி்ல் சிவப்பு வண்ணத்தைப் பூசிவிட்டு, சில காலி உணவு டப்பாக்களையும் விட்டுவிட்டுச் சென்றனர். அதாவது, இந்தப் பகுதி எங்களுடையது என்றரீதியில் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துவிட்டுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் மீண்டும் அதே பகுதியில் மீண்டும் தனது 'வேலையைக் காட்டியுள்ளது' சீனா.

மேலும் லே மாவட்டத்தில் காஷ்மீர் மாநில அரசு மேற்கொண்ட சாலைகள் அமைக்கும் பணியை சீனா கடந்த ஆண்டு தடுத்து நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment