Saturday, September 24, 2011

66வது மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றினார்-ஜனாதிபதியின் சாதனைகளுக்கு உலக தலைவர்கள் பாராட்டு!

Saturday, September 24, 2011
சர்வதேச ரீதியாக பயங்கரவாதம் உள்ள நிலையில் இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 66வது அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதை அடுத்து, வட மாகாணத்தில் தற்போது அபிவிருத்தி நடவடிக்கைகள் 22 சத வீதத்தால் அதிகரித்துள்ளது.

இதன் மூலம் உலகத்திற்கு எமது அபிவிருத்தி நடவடிக்கைகளின் தாற்பரியத்தை நன்கு அறிந்து கொள்ளக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர் 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை நாம் கண்டுள்ளதனை யாவரும் அறியலாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தற்போது 559 தமிழ் பேசும் காவல்துறையினரை நாம் எமது காவல்துறையில் இணைத்துள்ளோம்.

இதற்கு அமைய தற்போது ஆயிரத்து 143 தமிழ் காவல் துறையினர் சேவையில் உள்ளனர்.

இந்த வருடத்திலும், எதிர்வரும் காலங்களிலும் மேலும் அதிக தமிழர்களை காவல்துறையில் உள்வாங்க உறுதியுடன் உள்ளதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமது உரையில் தெரிவித்துள்ளார்.....

சர்வதேச சமூகம் இலங்கைக்கு நேசக்கரம் நீட்ட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் 66ம் அமர்வுகளில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மூன்று தசாப்த காலமாக இலங்கையை பாதித்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் போது அது சர்வதேச சமூகத்தை திருப்திபடுத்தும் வகையில் அமையும் என எதிர்பார்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை விவகாரத்தில் பக்கசார்பு தன்மை மிகவும் அதிகமான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கைப் பிரச்சினையின் போது சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு பாரபட்சமான வகையில் அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகள் குறித்து அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் உன்னிப்பாக அவதானிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். பலம்பொருந்திய நாடுகள் நீதி நிலைநாட்டப்படுவதனை தடுக்கக் கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

30 ஆண்டு கால யுத்தத்தின் பின்னர் நாட்டில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக வட மாகாணத்தில் 22 வீத பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

30 மாத இடைவெளிக்குள் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் பாரியளவிலான அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 669 தமிழ் பேசும் காவல்துறையினர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும், தற்போது மொத்தமாக 1143 உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த எண்ணிக்கையை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கி வரும் சவால்களை சரியாக புரிந்து கொண்டு உலக சமூகம் செயற்பட வேண்டும் எனவும், அரசாங்கத்தின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு நேசக்கரம் நீட்ட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அபிவிருத்தி அடைந்து வரும் உலகில் சிறிய நாடுகளை பாதுகாப்பதற்கு கூடுதல் முனைப்பு காட்டப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்துவமான சமூக, கலாச்சார மற்றும் மத விழுமிய அடையாளங்கள் காணப்படுகின்றன எனவும் அவற்றுக்கு குந்தகம் ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் என்ற பெயரில் நாடுகளின் தனித்துவமான அடையாளங்களில் தலையீடு செய்வதோ கலாச்சார மற்றும் மத விவகாரங்களில் தலையீடு செய்வதோ ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்........

பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க வேண்டும் - ஜனாதிபதி:-

பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் 66ம் அமர்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக பல உறுப்பு நாடுகள் பொதுச் சபையில் குரல் கொடுத்த போதிலும் இதுவரையில் அந்த நாட்டு மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீன மக்களின் உரிமை உறுதிப்படுத்தும் முயற்சி இன்னமும் யதார்த்தமாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பலஸ்தீனத்தை தனிநாடாக அங்ககரிப்பதற்கு ஓர் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் காலம் கடத்தாது அந்த வாய்ப்பினை பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக பேச்சுவார்த்தைகளை நடத்துவதனை விடவும், காத்திரமான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம் இஸ்ரேல் உள்ளிட்ட பிராந்திய வலய நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடிவதுடன், சமாதானத்தையும் நிலைநாட்ட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

நூற்றாண்டுகளாக சில நாடுகளில் பின்பற்றப்பட்டு வரும் மரபு ரீதியான கலாச்சார மற்றும் சமய சார்பான விவகாரங்களை மனித உரிமை என்ற போர்வையில் மாற்றியமைக்கக் கூடாது எனவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதனால் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதாகவும், எதிர்கால சந்ததியினரும் பாதிக்கப்படக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கியூபா நாட்டிற்கு இலங்கை பூரண ஆதரவு வழங்கும் எனவும், அந்த நாட்டு மக்களுக:கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கவாரதத்திற்கு எதிரான நடவடிக்கைகளின் போது ஒரு விதமான அணுகுமுறைகள் பின்பற்ற வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகின் சகல நாடுகளும் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு முழுமையான ஆதரவு வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதம் தொடர்பில் பக்கச்சார்பான அல்லது மாறுபட்ட கருத்துக்கள் நிலவக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். மிகவும் செல்வந்த நாடுகளிலும் பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் என்ற போர்வையில் பயங்கரவாத அமைப்புக்கள் நடவடிக்கைகளை தொடர்கின்றன என்பதனை அனைவரும் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

உலகப் பயங்கரவாதத்தை இல்லாது ஒழிப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத இல்லாதொழிப்பு குறித்து வலுவானதும், நடைமுறைச்சாத்தியமுடையதமான ஓர் தீர்வினை ஒருமித்த குரலில் உலகத்திற்கு அறிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை தோற்கடிக்கத்ததனைப் போன்றே சமாதானத்தை வென்றெடுப்பது மிகவும் கடினமான சவால் என்பது தமக்கு நன்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment