Thursday, September 15, 2011

5-வது நாளாக உண்ணாவிரதம் : கூடங்குளத்தில் கடும் பதற்றம்!.

Thursday,September 15,2011
வள்ளியூர்: கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி கிராம மக்கள் இன்று 5-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்கின்றனர். தொடர் உண்ணாவிரதத்தால் பெண்கள் உள்பட பலர் மயங்கி விழுந்தனர். அங்கு 10 ஆயிரம் பேர் திரண்டுள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணுமின் நிலையத்தை மூடக்கோரி மீனவ கிராமமான இடிந்தகரையில் மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். கடற்கரை பகுதியை சேர்ந்த 3 ஆயிரம் நாட்டு படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.

பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் உள்பட 128 பேர், சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். அவர்களுக்கு ஆதரவாக ஏராளமானோர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர். போராட்டம் காரணமாக கூடங்குளத்தில் இன்றும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அந்த வழியாக செல்லும் எல்லா பஸ்களும் 2-வது நாளாக குமரி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பி விடப்பட்டன.

நெல்லை கலெக்டர் செல்வராஜ் கூறுகையில், ‘‘கூடங்குளத்தில் அணுமின் உற்பத்தி தொடங்கும்போது அந்த பகுதியை சார்ந்த யாரையும் அப்புறப்படுத்த மாட்டோம். மீனவர்கள் எந்த தடையும் இன்றி இப்பகுதிகளில் மீன் பிடிக்கலாம். எனவே, உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்துள்ளார். அதை போராட்ட குழுவினர் ஏற்கவில்லை.

இன்று 5-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது. போராட்டத்துக்கு ஆதரவாக 10 ஆயிரம் பேர் திரண்டுள்ளனர். தொடர் உண்ணாவிரதம் இருப்பவர்களில் 13 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருகிறது. 17 பேருக்கு ரத்த அழுத்தமும் ஏற்பட்டுள்ளது. பெண்கள் உள்பட சிலர் மயங்கி விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம் தீவிரமாகி உள்ளதால் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வணிகர் சங்க தலைவர் வெள்ளையன், நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் உள்பட பலர் பேசினர். ராதாபுரம் தொகுதி தேமுதிக எம்எல்ஏ மைக்கேல் ராயப்பன் நேற்றிரவு உண்ணாவிரத பந்தலுக்கு வந்தார். இரவு முழுவதும் அங்கேயே தங்கினார்.

No comments:

Post a Comment