Tuesday, August 30, 2011

முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க ஜெயலலிதா தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது!

Tuesday, August 30, 2011
சட்டசபையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று ஜனாதிபதியை வலியுறுத்தி தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 72-ன்படி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து குடியரசு தலைவர் நிராகரித்த சூழ்நிலை குறித்தும் இந்த விஷயத்தில் தமிழக முதல்- அமைச்சரான எனக்கு உள்ள அதிகாரம் சட்டசபையில் 110-வது விதியின் கீழ் விளக்கமாக அறிவித்தேன்.

3 பேரின் கருணை மனுவை ரத்து செய்யும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்ட பிறகு இதில் நடவடிக்கை எடுகக முடியாது என்றும் கூறி இருந்தேன். இந்த விஷயத்தில் மீண்டும் குடியரசு தலைவர்தான் மறுபரிசீலனை செய்ய முடியும் என்று சுட்டிக் காட்டினேன்.

3 பேருக்கும் விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையால் தமிழக மக்கள் இடையே ஏற்பட்டுள்ள நிலை குறித்தும் பல்வேறு தரப்பினரும் வருத்தம் அடைந்தது பற்றியும் எனது கவனத்துக்கு வந்தது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தூக்குத் தண்டனை ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனக்கும் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பின்வரும் தீர்மானத்தை கொண்டு வருகிறேன்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழக அரசியல் கட்சிகளுக்கும் மதிப்பு அளிக்கும் வகையிலும், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுவை மறுபரிசீலனை செய்து அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய குடியரசு தலைவரை தமிழ்நாடு சட்டப்பேரவை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து என்னால் முன்மொழியப்பட்ட இந்த தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

இதைத்தொடர்ந்து தீர்மானம் குரல் ஓட்டு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.

No comments:

Post a Comment