Tuesday, August 30, 2011

3 தூக்கு தண்டனை கைதிகளில் வேறு சிறைக்கு மாற்றப்படுபவர் யார்?.

Tuesday, August 30, 2011
வேலூர்: தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள ராஜீவ் கொலையாளிகளில் ஒருவர் வேறு சிறைக்கு மாற்றப்படலாம். அவர் யார் என்று சிறைத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் கருணை மனு 11 ஆண்டுகளுக்கு பிறகு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, செப்டம்பர் 9ம்தேதி அதிகாலை 3 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையில் சிறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சிறை வளாகத்தைச் சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேலூர் சிறையில் உள்ள தூக்கு மேடை சரியாக இயங்குகிறதா என்று சோதனை செய்துள்ளனர். தூக்கிலிடுவதற்கு பயன்படும் மணிலா கயிறும் தயாராக உள்ளது. வேலூர் சிறையில் ஒரே நேரத்தில் 2 பேருக்கு மட்டுமே தண்டனை நிறைவேற்ற முடியும். இதனால், 3வது நபரை சென்னை புழல் அல்லது சேலம் சிறையில் தண்டனையை நிறைவேற்ற சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. புழல் அல்லது சேலம் சிறையில் ஒரு கைதியை தூக்கிலிட தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சாந்தன் அல்லது பேரறிவாளன் ஆகியோரில் ஒருவரை சேலம் அல்லது புழல் சிறைக்கு மாற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. பேரறிவாளன் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக வேறு சிறைக்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது. அதேநேரம், எந்த பரபரப்பிலும் தொடர்பில்லாத சாந்தனை மாற்றினால் பிரச்னை எதுவும் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.

ஹை ரிஸ்க் கைதிகளான இவர்களை வேறு சிறைக்கு மாற்றுவதில் பாதுகாப்பு பிரச்னைகள் இருக்கிறது. இதை எப்படி கையாள்வது என்று சிறைத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். Ôராஜிவ் கொலையாளிகளின் தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்படுகிறது. இதில் எந்த மாதிரியான உத்தரவு கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளோம். அதன்பிறகே ஒரு கைதியை வேறு சிறைக்கு மாற்றுவது என்பது முடிவாகும்Õ என்று சிறைத்துறை உயரதிகாரிகள் கூறினர்.

முருகனை சந்திக்க நளினி வருகை?

வேலூர் சிறையில் உள்ள முருகனை, புழல் சிறையில் உள்ள அவரது மனைவி நளினி சந்திக்க உள்ளார் என்ற தகவல் இன்று பரவியது. சென்னை புழல் சிறையில் இருந்து அவர் புறப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டது. இதை சிறை அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை போலீசார் உறுதிபடுத்தவில்லை.

No comments:

Post a Comment