Thursday, July 21, 2011

பூமி பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு பள்ளி பருவம் முதலே பதிய வைக்க வேண்டும்-சூரியன் எப்எம் விழாவில் கவிஞர் வைரமுத்து!

Thursday, July 21, 2011
சென்னை : பூமி பாதுகாப்பு குறித்து பள்ளி பருவம் முதல் மாணவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என்று சூரியன் எப்எம் விழாவில் கவிஞர் வைரமுத்து பேசினார்.
சூரியன் எப்எம் சார்பில் கவிஞர் வைரமுத்துவின் 58வது பிறந்த நாளை முன்னிட்டு “வைரத்தின் நிழல்கள்’’ என்ற பெயரில் “பூமியை வாழ விடு’’ என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் கவிதைப்போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர் களுக்கான பரிசளிப்பு நேற்று மாலை சென்னையில் நடந்தது.

கவிஞர் வைரமுத்து தலைமை தாங்கி, கவிதை போட்டியில் முதல் பரிசை மதுரையை சேர்ந்த கார்த்திகேயன் பெற்றார். இவருக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் டிஜிட்டல் கேமரா, ஈரோட்டை சேர்ந்த பிரதாப் ஸீ10 ஆயிரம், இன்டக்சன் ஸ்டவ், சென்னையை சேர்ந்த அஸ்வின் ரூ.5 ஆயிரம் செல்போன் ஆகியவை பரிசாக வழங்கினார்.
இதுபோல குன்னம் வடிவேலு, செங்கல்பட்டு வீரமணி, புதுச்சேரி தேவகி ஆனந்த் இவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் பரிசு என மொத்தம் ரூ.50 ஆயிரத்திற்கான பரிசுகளை கவிஞர் வைரமுத்து வழங்கினார். மேலும் 6 பேருக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது. பின்னர் விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:

எனது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாட்டின் கவிஞர்களை ஒரு புள்ளியில் குவித்த சூரியன் எப்எம்மிற்கு எனது நன்றி. கவிதை, கவிஞர்கள் என்றால் ஆசை. நீங்கள் இல்லை என்றால் இந்த பூமி வெறும் வெற்று பூமியாகத்தான் இருக்கும். இந்த கவிதைப் போட்டியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் வந்து குவிந்ததை பார்த்தபோது தமிழ்நாட்டின் மக்கள் தொகை யை விட கவிஞர்கள் அதிகம் என்று எண்ணினேன். நீங்கள் கவிதையில் எழுதிய கருத்துக்கள் சிறப்பாக இருந்தது. அதனை நீங்கள் தான் செயல்படுத்த வேண்டும்.

இயற்கையை வணங்குங்கள். மக்களை இயற்கை பக்கம் திருப்புங்கள். பூமியை காக்கும் பொறுப்பு நாம் அனைவருக்கும் இருக்கிறது. பூமி பாதுகாப்பு குறித்து பள்ளி பருவம் முதல் மாணவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். இதுவே எனது வேண்டுகோள். இவ்வாறு அவர் கூறினார். பரிசளிப்பு விழாவில், சூரியன் எப்எம் சேல்ஸ் பிரிவு துணைத் தலைவர் வெங்கட்ராம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை மேலாளர் சுவாமிநாதன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி துணை பொதுமேலாளர் தமிழ்மறை ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment