Thursday, July 21, 2011

தீவிரவாதத்தை ஒழிப்பதே எங்கள் குறிக்கோள் ஹிலாரி கிளிண்டன் பேச்சு!

Thursday, July 21, 2011
சென்னை : ‘தீவிரவாதத்துக்கு எதிராக போராடுவதும், ஒளி மயமான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதும்தான் இந்திய அமெரிக்க நாடுகளுக்கு பொதுவான இலக்காக உள்ளன’ என்று அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார். சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு பொது நூலகத்துக்கு அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று வந்தார். அங்கு பள்ளி கல்லூரி மாணவர்கள் இடையே இந்தியா & அமெரிக்க நாடுகளின் 21ம் நூற்றாண்டு தொலை நோக்கு பார்வை குறித்து பேசியதாவது:

இந்தியாவின் பெரிய நூலகம் இது என்று கூறினார்கள். இங்கு உரையாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. சென்னைக்கு முதல் முறையாக இப்போதுதான் வந்துள்ளேன்.
அமெரிக்காவும் இந்தியாவும் உலக சரித்திரத்தை மாற்றி அமைத்து எழுதுவதில் முக்கிய பங்கு வகிக்கும். இதற்கு காரணம் என்னவென்றால் இந்தியாவும், அமெரிக்காவும் உலகில் உள்ள பெரிய இரு ஜனநாயக நாடுகளாக நூற்றாண்டுகள் தொட்டு பழம்பெரும் பாரம்பரியத்துடன் இருந்து வருகின்றன. இந்தியாவை நாங்கள் நேசிக்கிறோம்.

இருநாடுகள் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் தீவிரவாத ஒழிப்பு, உலக தீவிரவாதத்துக்கு எதிரான விடை காண்பது போன்ற விஷயங்களில் ஈடுபடுவது மற்றும் உலக வெப்பமயமாதல் போன்ற முக்கிய பிரச்னைகளில் கூட்டாக இணைந்து செயல்படுவது என்ற உறுதி இருநாடுகளுக்கும் உள்ளது. இதற்காக தனியாக ஒரு மையத்தையும் நிறுவியுள்ளோம். கடற்கொள்ளை மற்றும் கடல் பாதுகாப்பு குறித்து இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக செயல்பட்டு தீவிரவாதத்தை வேருடன் அறுத்து, மீண்டும் தீவிரவாதம் தலைகாட்டாத வகையில் பணியாற்ற உறுதி எடுத்துள்ளோம். இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து நாங்கள் மிகவும் ஆச்சரியமாக பார்த்தோம். உலகத்துக்கே ஒரு முன்மாதிரியாக இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு அமைந்துள்ளது. உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் ஆப்கன் தேர்தலின்போது ஐக்கியநாடுகள் சபையும், அமெரிக்காவும் இந்திய தேர்தல் அலுவலர்களை பார்வையாளர்களாக அழைத்து தேர்தலை நடத்த சொன்னது.

உலகம் முழுவதும் இந்திய கலாச்சாரமும் இந்திய பாரம்பரியமும் பரவியுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள அங்கோர்வாட் கோயிலில் இதை பார்க்க முடியும். இந்து கடவுளான விநாயகரின் வடிவம் இந்தோனேஷிய நாட்டில் பாதுகாப்பு கடவுளாக உள்ளதையும் சொல்ல முடியும். இதன் மூலம் இந்தியா ஒரு கலாச்சார சின்னமாக திகழ்கிறது. இந்த ஆண்டு நடக்க இருக்கும் தெற்காசிய நாடுகளுக்கான கூட்டத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கடல் பாதுகாப்பு குறித்து பேச உள்ளது.

இது ஒரு முக்கியமான விவாத பொருளாக அமையும். இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் உலக பொருளாதாரம் வர்த்தகம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்து வரும் நாடுகளாக திகழ்ந்து வந்துள்ளன. இந்த மூன்று நாடுகளும் கூட்டாக இணைந்து உலக வளர்ச்சிக்கும் அமைதிக்கும் பாடுபட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா உலக மக்கள் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் சமஉரிமையும், சமவாய்ப்பும் அளிக்க வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. தமிழகத்தில் பல இன மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் தமிழக அரசின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பாடுபடுகின்றனர். இதை இலங்கை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். உலக அளவிலான சிக்கல்களை தீர்ப்பதில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும்.

குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க பகுதிகளில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த உதவிட வேண்டும். இந்திய நாட்டு பிரதமர் மன்மோகன் சிங்கின் கனவு எதுவென்றால் காலையில் அமிர்தசரசில் உணவு சாப்பிட வேண்டும், மதியம் பாக்கிஸ்தானில் உள்ள லாகூரில் உணவு சாப்பிட வேண்டும், இரவு ஆப்கனில் உணவு சாப்பிட வேண்டும் என்பதுதான். இந்த உணர்வு தவறானது அல்ல. இது போன்ற அமைதியான இணக்கமான சூழ்நிலையைத்தான் அமெரிக்காவும் விரும்புகிறது. இவ்வாறு ஹிலாரி கிளிண்டன் பேசினார்.

No comments:

Post a Comment