Saturday, July 23, 2011

நார்வே நாட்டில் கொடூரம் 80 பேரை சுட்டுக்கொன்ற தீவிரவாதி குண்டு வெடிப்பில் 7 பேர் சாவு!

Saturday, July 23, 2011
நார்வேயின் தலைநகர் ஆஸ்லோவில் உள்ள 20 மாடி கட்டிடத்தில் பிரதமர் அலுவலகம் இயங்கி வருகிறது. நேற்று அந்த கட்டிடத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். அதில், 7 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.


குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது பிரதமர் ஜெனஸ் ஸ்டோல் டன்பெர்க் அலுவலகத்தில் இல்லை. அதனால் அவர் உயிர் தப்பினார். குண்டு வெடித்தபோது அந்த 20 மாடி அரசு கட்டிடம் இடிந்து நொறுங்கியது. அதில் இருந்து கரும்புகை வெளியேறியது. கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி, ஜன்னல்கள் நொறுங்கி விழுந்தன. கட்டிடத்தின் ஒரு பகுதி கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. காயம் அடைந்த மக்கள் ரத்த காயத்துடன் ரோடுகளில் ஓடினர்.

இதனால் அந்த பகுதி முழுவதும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இச்சம்பவம் நடந்த அடுத்த சில மணி நேரத்தில் ஆஸ்லோ புறநகர் பகுதியில் உள்ள யுடோயா தீவில் பிரதமரின் ஆளும் தொழிலாளர் கட்சியின் இளைஞர் முகாமில் நூற்றுக்கணக்கான வாலிபர்கள் கலந்து கொண்டனர். அப்போது போலீஸ் உடையில் ஒரு தீவிரவாதி அங்கு வந்தான். அவன் ஒரு கைதுப்பாக்கி, தானியங்கி துப்பாக்கி மற்றும் ஒரு சிறிய ரக துப்பாக்கி என 3 ரக துப்பாக்கிகளை வைத்திருந்தான். அவன் முகாமில் கலந்து கொண்ட வாலிபர்கள் மீது சரமாரியாக சுட்டான்.

அதில் இருந்து தப்பிக்க வாலிபர்கள் அங்குமிங்கும் ஓடினர். பலர் கடலுக்குள் குதித்தனர். ஆனால் அவர்களை விரட்டி விரட்டி ஆவேசத்துடன் சரமாரியாக சுட்டான். இதில் 10 பேர் உயிரிழந்தனர். இன்று காலை சாவு எண்ணிக்கை அதிகரித்தது. துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிக்க ஓடியவர்களின் பிணங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பல உடல்கள் குண்டு காயத்துடன் தண்ணீரில் மிதந்தன. துப்பாக்கி சூட்டில் மட்டும் 80 பேர் உயிர் இழந்துள்ளனர்.

மேலும் ஏராள மானவர்கள் காயம் அடைந்துள்ளனர். போலீஸ் உடையில் வந்து இளைஞர்கள் முகாமில் துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர்.அவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூடு ஆகிய 2 சம்பவங்களிலும் இவனுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இளைஞர் முகாமிலும் பிரதமர் கலந்து கொள்வதாக இருந்தது. எனவே, அவரை குறிவைத்து தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதற்கான காரணம் குறித்து அவனிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஆனால், குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்த தாக்குதல்களுக்கு ஜெனஸ் ஸ்டால் டன்பெர்க் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment