Friday, July 12, 2019

ராகுல் பிடிவாதம் எதிரொலி- சோனியாவை மீண்டும் தலைவராக்க முயற்சி!

பல தடவை சமரசம் செய்தும் ராகுல்காந்தி மனம் மாறாததை அடுத்து தலைவர் பதவியை ஏற்கும்படி சோனியாவிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவியதால் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகுவதாக அறிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பல தடவை சமரசம் செய்தும் ராகுல்காந்தி மனம் மாறவில்லை. சொந்த தொகுதியான அமேதியில் தோல்வி அடைந்ததால் தலைவர் பதவி வேண்டாம் என்பதில் அவர் பிடிவாதமாக உள்ளார்.தனது குடும்பத்தில் இருந்தும் யாரையும் தலைவர்
பதவிக்கு தேர்வு செய்யக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ள ராகுல் புதிய தலைவர் தேர்வில் தலையிடமாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் கடந்த 1½ மாதங்களாக காங்கிரஸ் கட்சி தலைவர் இல்லாமல் உள்ளது.
 
ராகுலின் பிடிவாதம் நீடிப்பதால் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுனகார்கே, அசோக்கெலாட் உள்பட சிலரது பெயர் தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது. தென்மாநிலத்தை சேர்ந்த ஒருவரை தலைவராக தேர்ந்து எடுக்கலாம் என்ற ஆலோசனையும் நடப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதில் ஒருமித்த முடிவு ஏற்படவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு வரலாறு காணாத நிலையில் 17 மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்காததால் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரசின் உள்கட்டமைப்பு வலு இழந்துள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில் கட்சி நிலை குலைந்துள்ள நிலையில் தலைவர் பதவியை எப்படி ஏற்பது என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் தயக்கம் ஏற்பட்டுள்ளது. இது தவிர நேரு குடும்பத்தை சேராத ஒருவர் தலைவராக இருந்த காலங்களில், அந்த தலைவர்கள் கட்சியை கட்டுக்கோப்பாக வைக்க முடியாத நிலையே ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டும் தலைவர் பதவியை ஏற்க காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் தயக்கம் காணப்படுகிறது.
 
இதையடுத்து தலைவர் பதவியை ஏற்கும்படி சோனியாவிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். கடந்த மே மாதம் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானபோது, கட்சி தலைவர் பதவியை ஏற்பீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு சோனியா அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று கூறியிருந்தார். என்றாலும் சோனியாவை விட்டால் காங்கிரசை வழி நடத்த வேறு தலைவர்கள் இல்லை என்று மூத்த தலைவர்கள் நினைக்கிறார்கள். எனவே சோனியாவை மூத்த தலைவர்கள் மீண்டும், மீண்டும் சந்தித்து தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ளும் படி தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால் சோனியா காங்கிரஸ் தலைவர் பதவியில் சிறிதும் விருப்பம் இல்லாமல் உள்ளார்.
 
தற்போது சோனியாவுக்கு 72 வயதாகிறது. கடந்த சில ஆண்டுகளாக அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாத நிலையில் கட்சியில் எந்த பொறுப்பும் வேண்டாம் என்ற மனநிலையில் சோனியா இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவரை மூத்த தலைவர்கள் தற்காலிகமாவது தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தியபடி உள்ளனர். அதை சோனியா ஏற்பாரா? என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ஏற்பட்டுள்ளது. சோனியா முடிவுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment