Wednesday, July 10, 2019

ஒவ்வொரு நாட்டுக்கும் 7 சதவீத கிரீன்கார்டு வழங்கும் மசோதாவை நீக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு!

அமெரிக்காவில், ஒவ்வொரு நாட்டுக்கும் 7 சதவீதம் கிரீன்கார்டு வழங்கும் திட்டத்தை நீக்கும் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வாக்கெடுப்பு வெற்றி பெற்றால் இந்தியர்கள் கூடுதல் பலன்பெறுவார்கள்.அமெரிக்காவிற்கு இந்தியா உள்பட பல்வேறு வெளிநாட்டினர் வேலைக்காக எச்1பி விசா மூலம் செல்கின்றனர். இவ்வாறு அங்கு தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்ற செல்லும் இந்தியர்கள் நிரந்தரமாக தங்கி பணிபுரிய அல்லது வீடு வாங்க கிரீன்கார்டு அவசியம். இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள குடியேற்ற சட்டப்படி பிற நாட்டை சேர்ந்தவர்கள் தலா 7 சதவீதம் பேர் தான் கிரீன்கார்டு பெற முடியும். இதனால் பல லட்சம் ஐடி இந்தியர்கள் 70 ஆண்டுக்கும் மேலாக காத்திருந்தும் கிரீன்கார்டு பெற முடியாமல் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில் கிரீன்கார்டு பெற ஒவ்வொரு நாட்டுக்கும் 7 சதவீத இடஒதுக்கீடு என்ற நடைமுறையை நீக்க கோரும் மசோதா மீது அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று இரவு வாக்கெடுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மசோதா திருத்தமின்றியோ அல்லது விவாதம் இன்றியோ நிறைவேற 290 எம்பிக்கள் ஆதரவு தேவை. தற்போதைய சூழ்நிலையில் 108 குடியரசு கட்சி உறுப்பினர்கள் மற்றும் 203 ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. இதனால் வாக்கெடுப்பு வெற்றி பெறும் நிலை உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் இந்தியர்கள் அதிகளவில் பயன்பெறுவார்கள். மேலும் இந்த சட்டத்தால் பிறநாட்டில் இருந்து குடும்பத்துடன் அமெரிக்காவில் பணியாற்ற செல்வோர் கிரீன் கார்டு பெறுவது தற்போதுள்ள 7 சதவீதம் என்பதில் இருந்து 15 சதவீதமாக உயரும். தனிப்பட்ட முறையில் அமெரிக்காவுக்கு செல்லும் சீன பயணிகள் எண்ணிக்கை பெருமளவு குறையும். முன்பதிவு இல்லாத விசாக்களில் 85 சதவீதத்துக்கு அதிகமாக பிற நாட்டை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படாது என சிஆர்எஸ் என்ற ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment