Saturday, June 29, 2019

பொருளாதாரம், தீவிரவாத சவாலை எதிர்கொள்ள 5 அம்ச அணுகுமுறை: பிரிக்ஸ் தலைவர்கள் கூட்டத்தில் மோடி பேச்சு!

பொருளாதாரம், தீவிரவாத சவால்களை எதிர்கொள்வதில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் இணைந்து செயல்பட வேண்டும்,’ என வலியுறுத்தியுள்ள பிரதமர் மோடி, அதற்கான 5 அம்ச அணுகுமுறை தேவை என்றும் கூறியுள்ளார்.இருபது நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஜி-20 மாநாட்டின் 14வது மாநாடு,  ஜப்பான் நாட்டில் உள்ள ஒசாகா நகரில் நேற்று தொடங்கியது, இன்று வரை நடக்கிறது. இதில், பங்கேற்பதற்காக ஜி-20 நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் ஒசாகாவில் குவிந்துள்ளனர். இவர்கள் தனித்தனியாகவும், குழுவாகவும் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ‘பிரிக்ஸ்’ அமைப்பில் இடம் பெற்றுள்ள பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகள், ஜி-20 அமைப்பிலும் உறுப்பினர்களாக உள்ளன. ஜி-20 மாநாட்டின் இடையே, பிரிக்ஸ் தலைவர்களின் கூட்டமும் தனியாக நடந்தது. இதில், பிரதமர் மோடி பேசியதாவது:

பொருளாதாரத்திலும், தீவிரவாதத்திலும் நாம் சந்திக்கும் சவால்கள் குறித்தும், அவற்றை முறியடிப்பதற்கான 5 அம்ச அணுகுமுறை குறித்தும் பேச விரும்புகிறேன். உலக பொருளாதாரத்தில் மந்த நிலையும், நிச்சயமற்ற தன்மையும் நிலவுகிறது. சில நாடுகள் எடுக்கும் தன்னிச்சையான முடிவுகளும், அவற்றின் போட்டி மனப்பான்மையும், விதிமுறைப்படி செயல்படும் பன்னாட்டு வர்த்தக முறையின் முக்கியத்துவத்தை குறைக்கிறது. இந்த பிரச்னைகளை பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு தீர்க்க வேண்டும். பன்னாட்டு வர்த்தகத்தை மேம்படுத்த, சர்வதேச வர்த்தக மற்றும் நிதி அமைப்புகளில் தேவையான சீர்திருத்தங்களை நாம் கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி தொடர, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போன்றவை குறைந்த விலையில் கிடைக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதும், அவற்றை நீடிக்கச் செய்வதும் 2வது பெரிய சவாலாக உள்ளது. தொழில்நுட்பங்கள் டிஜிட்டல் மயமாவதும், பருவநிலை மாற்றமும் நமக்கு மட்டும் அல்ல; எதிர்கால தலைமுறைக்கும் கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. தீவிரவாதம், மனித சமுதாயத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இது அப்பாவி மக்களின் உயிரை மட்டும் எடுப்பதில்லை. பொருளாதார முன்னேற்றத்திலும், சமூக நிலைத்தன்மையிலும் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, தீவிரவாதத்துக்கும் அளிக்கப்படும் அனைத்து வித ஆதரவுகளும் நிறுத்தப்பட வேண்டும். தீவிரவாதத்தை எதிர்த்து போராட, சர்வதேச மாநாட்டை நடத்த வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து, பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிரவாத செயல்பாடுகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு செல்லும் சட்ட விரோத நிதியுதவி ஆகியவற்றை தடுக்க வேண்டும் என கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

கூடுதலாக 30,000 இந்தியர்கள்ஹஜ் செல்ல சவுதி அனுமதி
ஜி-20 மாநாட்டின் இடையே சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் இந்திய ஹஜ் பயணிகளுக்கு கூடுதல் இடஒதுக்கீடு தரக்கோரி சல்மானிடம் கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக் கொண்ட சல்மான்,  கூடுதலாக 30 ஆயிரம் இந்தியர்கள் ஹஜ் பயணம் ேமற்கொள்ள அனுமதி அளிப்பதாக உறுதி அளித்தார். தற்போது, ஆண்டுக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் இந்தியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அனுமதி வழங்கியுள்ளது. இது, விரைவில் 2 லட்சமாக உயரும்.

எஸ்-400 ஏவுகணை பற்றி பேசவில்லை
ஜி-20 மாநாட்டுக்கு வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்பை, பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். இது பற்றி வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே அளித்த பேட்டியில், ‘‘தேர்தலில் மோடி மீண்டும் வெற்றி பெற்றதற்கு டிரம்ப் வாழ்த்து தெரிவித்தார். ஈரான் விவகாரம், 5 ஜி, வர்த்தகம் மற்றும் ராணுவ உறவுகள் குறித்து இருவரும் பேசினர். ஈரான் விவகாரம் குறித்து பேசுகையில், இந்தியாவின் எரிபொருள் தேவை மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் அமைதி நிலவுவதின் முக்கியத்துவம் குறித்து மோடி விளக்கினார். ரஷ்யாவிடம் இந்தியா வாங்கும் எஸ்-400 ஏவுகணை விவகாரம் பற்றி பேசப்படவில்லை,’’ என்றார்.

அதிபர் தேர்தலில் குறுக்கிட வேண்டாம்
கடந்த 2016ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் குறுக்கீடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிறப்பு வக்கீல் ராபர்ட் முல்லர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில், ‘அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததற்காக ஆதாரங்கள் உள்ளன. ஆனால் டிரம்ப் தலைமையிலான தேர்தல் பிரசார குழு, ரஷ்ய குழுவினருடன் எந்த சதியிலும் ஈடுபடவில்லை’ என கூறியது. இது அதிபர் டிரம்புக்கு நிம்மதியை அளித்தது. இந்நிலையில், ஜி-20 மாநாட்டில் பங்கேற்றுள்ள டிரம்ப்பும், ரஷ்ய அதிபர் புடினும் நேற்று சந்தித்து பேசினர். பின்னர், இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது நிருபர் ஒருவர், ‘2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட வேண்டாம் என புடினிடம் கூறுவீர்களா?’ என டிரம்ப்பை பார்த்து கேட்டார். இதற்கு, ‘‘நிச்சயமாக கூறுவேன்,’’ என பதிலளித்த டிரம்ப், அருகில் நின்ற புடினை பார்த்து, ‘‘எங்கள் நாட்டு தேர்தலில் தலையிட வேண்டாம்... ப்ளீஸ்...’ என நகைச்சுவையாக கூறினார்.

உடல் நிலை பாதித்தாலும்மாநாட்டுக்கு வந்த ஏஞ்சலா
ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மார்க்கலுக்கு (64) கடந்த வாரம் உடல் நடுக்கம் ஏற்பட்டது. கோடைக்காலத்தில் ஏற்பட்ட நீர்ச்சத்து குறைவு காரணமாக இந்த நடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினமும் ஜெர்மன் அதிபர் உரையாற்றும் நிகழ்ச்சியின்போது, மார்க்கலுக்கு 2வது முறையாக உடல் நடுக்கம் ஏற்பட்டது. இது, 2 நிமிடங்கள் நீடித்தது. இதனால், ஜி 20 மாநாட்டில் அவர் பங்கேற்க மாட்டார் என கருதப்பட்டது. ஆனால்,  மாநாட்டில் பங்கேற்க நேற்று அவர் ஜப்பான் வந்தார்.

No comments:

Post a Comment