Tuesday, June 4, 2019

அருணாச்சலப் பிரதேசத்தில் மாயமான ஏ.என்-32 ராணுவ விமானம்!

நேற்று அருணாச்சலப் பிரதேசத்தில் மாயமான ஏ.என்-32 ராணுவ சரக்கு விமானத்தை தேடும் பணியில் இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தின் ஜோர்ஹத் பகுதியில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்-32 என்ற விமானம் நேற்று பகல் 12.27 மணிக்கு புறப்பட்டு சென்றது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மேன்சுக்கா என்ற ராணுவ தளத்துக்கு சென்ற இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5 பயணிகள் என மொத்தம் 13 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்டு சென்ற 35 நிமிடத்துக்கு பின்னர் விமான கட்டுப்பாடு மையத்துடனான தொடர்பை இழந்தது. இதனை தொடர்ந்து விமானத்தை தேடும் பணி தொடங்கப்பட்டது. அப்போது, மாயமான இந்திய விமானப் படை விமானத்தின் உடைந்த பாகங்கள் அருணாச்சலப்பிரதேசத்தின் மேற்கு சியாங் மாவட்டத்தின் டாடோ என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

எனினும், விமானத்தில் பயணித்த 13 பேர் நிலை என்ன என்று தெரியவில்லை. இதையடுத்து, விமானப்படை ஹெலிகாப்டர்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. ஹெலிகாப்டர்களின் தேடுதல் பணியின் போது விமானம் விபத்தில் சிக்கி நொறுங்கி இருப்பது தெரியவந்தது. தொடர்பு துண்டிக்கப்பட்ட விமானம் இயந்திரக் கோளாறால் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என்று கருதப்பட்டது. எனவே, சுகோய் 30 மற்றும் C-130J ஹெர்குலஸ் ரக விமானப்படை விமானங்கள் உதவியுடன் மாயமான விமானத்தை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல், தரைப்பகுதியில் இந்திய ராணுவமும், இந்தோ-திபெத் எல்லைப் பகுதி போலீசாரும் தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், விமானப்படை தெரிவித்துள்ளது.

இஸ்ரோ உதவி..

இந்த நிலையில், மாயமான விமானத்தை மீட்கும் பணியில் இஸ்ரோவும் உதவி வருகிறது. ஏ.என்-32 ராணுவ சரக்கு விமானத்தை தேடும் பணியில் இஸரோவின் செயற்கைக் கோள்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன. விபத்து நடந்திருக்கலாம் என்று கருதப்படும் மலைப்பகுதியில் செயற்கைக்கோள்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, இந்த விமானத்தை தேடும் பணியில், அரக்கோணம் விமானப்படை தளத்தை சேர்ந்த பி8ஐ விமானமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ரஷிய தயாரிப்பான இந்த ஏ.என்-32 ரக விமானம் இரட்டை என்ஜின் கொண்டதாகும். விமானப்படை வீரர்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு சேர்க்கும் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த விமானம் கடந்த 40 ஆண்டுகளாக பணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment