Thursday, May 30, 2019

இரண்டாவது முறை பிரதமராக மோடி இன்று பதவியேற்கிறார்: நாளை புதிய அமைச்சரவை கூட்டம்!

ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை நடக்கும் விழாவில், தொடர்ந்து 2வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கிறார். அவருடன் புதிய அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர். நாட்டின் 17வது மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது. பாஜ தனித்தே 303 இடங்களை பிடித்து தனிப்பெரும்பான்மையை எட்டியது. இருப்பினும், தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்கிறது. டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்பி.க்கள் கூட்டத்தில், இதன் நாடாளுமன்ற கட்சித் தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 7 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதில், 2வது முறையாக

பிரதமர் பதவியை மோடி ஏற்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். தொடர்ந்து புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கின்றனர். இவர்களின் பட்டியல் இதுவரை அறிவிக்கப்படவில்லை. பதவியேற்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக வெளிநாட்டு தலைவர்கள், அனைத்து மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு பிராந்திய கட்சிகளின் தலைவர்கள், தேசிய கட்சிகளின் மாநில தலைவர்கள், துறை சார்ந்த பிரபலங்கள், திரைப்பட நட்சத்திரங்கள் என பலதரப்பட்ட முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளான வங்கதேசம், இலங்கை, மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூடான் நாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிர்கிஸ்தான், மொரீசியஸ் நாட்டு தலைவர்களும் விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டு உள்ளனர்.

இன்று இரவு பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர், நாளை முதல் அமைச்சரவை கூட்டம்  நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்குப் பிறகு பல்வேறு முக்கிய அறிவிப்புக்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 6ம் தேதி கூட்டத்தொடர்: 17வது மக்களவை கூட்டத்தொடர் வரும் 6ம் தேதி தொடங்க இருக்கிறது. அன்றையே தினமே புதிய எம்பி.க்கள் பதவியேற்றுக் கொள்கின்றனர். தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்பட்டு, புதிய எம்பி.க்களுக்கு அவர் பதவி பிரமாணம் செய்து வைப்பார். அன்னறய தினம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். தொடர்ந்து 15ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 10ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இம்ரானுக்கு அழைப்பில்லை: சார்க் அமைப்பில் இடம் பெற்றுள்ள அண்டை நாடான பாகிஸ்தானுக்கு மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை. இதே போல, வெளிநாட்டு பயணத்தில் இருப்பதால் பதவியேற்பு விழாவில் வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனா கலந்துகொள்ள இயலாது என அந்நாடு ஏற்கனவே தெரிவித்துள்ளது. ஜூலை 10ல் மத்திய பட்ஜெட்: மக்களவை தேர்தல் காரணமாக, கடந்த பிப்ரவரியில் மோடி அரசு இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்தது.

தேர்தல் முடிந்ததை தொடர்ந்து, முழுபட்ஜெட் தாக்கல் குறித்து நிதியமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஜூலை 10ம் தேதி முழுமையான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக தலைவர்கள் பங்கேற்பு: மோடியின் பதவியேற்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கின்றனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பாஜ ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.அலுவலகங்களை மூட உத்தரவு:பதவி ஏற்பு விழாவையொட்டி இந்த விழாவை முன்னிட்டு அந்த பகுதியில் இருக்கும் அரசு அலுவலகங்களை முன்கூட்டியே பிறபகல் 2 மணிக்குள் மூடும்படி பணியாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, நார்த் பிளாக், சவுத் பிளாக், ரயில் பவன், வாயு பவன், சேனா பவன், டிஆர்டிஓ உள்ளிட்ட அலுவலகங்களை பிற்பகல் 2 மணிக்கு மூடுகிறது. பதவி ஏற்பு விழாவில் சுமார் 8 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். விழா முடிந்ததும், முக்கிய அழைப்பாளர்கள் சுமார் 3,000 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரவு விருந்து வழங்குகிறார். இதில், தால் ரைசினா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு உணவுகள் பரிமாறப்பட உள்ளன.மம்தா, பினராய் புறக்கணிப்பு:மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளதாக நேற்று முன்தினம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார். ஆனால், திடீரென தனது நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டுள்ள மம்தா, விழாவில் பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறையால் 54 பேர் கொல்லப்பட்டதாக பாஜ  கூறி வருகிறது. இது முற்றிலும் உண்மையில்லை. தனிப்பட்ட பிரச்னை மற்றும் முன்விரோதம் போன்றவற்றால் இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பாஜ தவறான தகவலை பரப்பி வருகிறது. எனவே, சாரி மோடி ஜீ. விழாவில் பங்கேற்க முடியாத கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளேன்’ என்று கூறியுள்ளார். இதேபோல், கேரள முதல்வர் பினராய் விஜயனும் பதவியேற்பு விழாவை புறக்கணித்துள்ளார்.சோனியா, ராகுல் பங்கேற்பு:மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சி தோல்வியை தழுவியது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் ராகுல்காந்தி உறுதியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்கு ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதையேற்று பதவியேற்பு விழாவில் சோனியாவும், ராகுல்காந்தியும் பங்கேற்கின்றனர்.கொல்லப்பட்ட தொண்டர்கள் குடும்பத்தினருக்கும் அழைப்பு:மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் - பாஜ இடையே கடும் மோதல் நிலவுகிறது. இதன் காரணமாக, இந்த மக்களவை தேர்தலின்போது திரிணாமுல் காங்கிரசார் நடத்திய தாக்குதல்களில் தனது தொண்டர்கள் 80 பேர் கொல்லப்பட்டதாக பாஜ குற்றம்சாட்டி வருகிறது. இதை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்து வருகிறது.  இந்நிலையில், இம்மாநில மாநில பாஜ தலைவர் திலீப் கோஷ் நேற்று அளித்த பேட்டியில், “மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறைகளால்  உயிரிழந்த 42 பாஜ தொண்டர்களின் குடும்பத்தினர், மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கான ரயில் டிக்கெட் போன்றவற்றை கட்சியே ஏற்பாடு செய்துள்ளது. இது, திரிணாமுல் காங்கிரசின் வன்முறையால் உயிர்த் தியாகம் செய்த பாஜ தொண்டர்களுக்கு நாங்கள் செலுத்தும் மரியாதையாகும்,” என்றார். இது பற்றி திரிணாமுல் காங். மூத்த தலைவர் கூறுகையில், “இது மாநில நிர்வாகத்தை அவமதிப்பதற்காக பாஜ செய்துள்ள சதி,’’  என்றார். அமைச்சர் பதவி வேண்டாம்- ஜெட்லி:அமைச்சரவையில் யாருக்கு இடம் வழங்கலாம், யாருக்கு என்ன இலாகா ஒதுக்கீடு செய்யலாம் என்பது குறித்து மோடியும், பாஜ தலைவர் அமித் ஷாவும் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார்கள். இதற்கிடையே, தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஓய்வெடுக்க விரும்புகிறேன். கட்சிக்கும், ஆட்சிக்கும் வெளியில் இருந்தபடியே அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே அருண் ஜெட்லியை சமாதானம் செய்வதற்காக பிரதமர் மோடி நேற்றிரவு அவரது வீட்டிற்கு சென்று பேசினார்.

No comments:

Post a Comment