Friday, October 2, 2015

ஜெனிவா அறிக்கை தொடர்பில் விரைவில் கலந்துரையாடப்படும்: மைத்திரிபால!

Friday, October 02, 2015
ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட அறிக்கையினை செயல்படுத்துவதற்காக நாட்டின் அரசியலமைப்புப் படி உள்நாட்டு பொறிமுறை ஒன்று பின்பற்றப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை சம்பந்தமாக கலந்துரையாடி தீர்வொன்றை எட்டுவதற்காக விரைவில் அனைத்து மதத் தலைவர்களையும் உள்ளடக்கிய கூட்டம் ஒன்று கூட்டப்படவுள்ளதாகவும் அவர் ரெிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் 70ஆவது பொதுச்சபைக் கூட்டத் தொடரில் கலந்துகொண்ட பின்னர் அமெரிக்காவில் இருந்து இன்று மாலை நாட்டை வந்தடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஷேட ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்தும் பேது எதிர்நோக்கும் பிரச்சினைகளை பாராளுமன்றத்திற்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கும் தௌிவுபடுத்துவதற்கு தான் தயார் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று வாழும் மக்களுக்கும் நாளை பிறக்கப் போகும் பிள்ளைகளுக்கும் நல்லது நடக்கும் விதமாகவும் நாட்டுக்கோ மக்களுக்கோ எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாதவாறு சட்டத்தை மதித்து நிறைவேற்றுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தலையீடுகள் இன்றியும், சர்வதேச விசாரணை தொடர்பாக இருந்த தீர்மானத்தை அகற்றி உள்ளக பொறிமுறை மூலம் நாட்டின் அரசியலமைப்புப்படி இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கிடைத்திருப்பது பெரிய வெற்றியாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 
      

No comments:

Post a Comment