Monday, September 14, 2015

ரணில் விக்ரமசிங்கே இன்று இந்தியா வருகை!

Monday, September 14, 2015
சென்னை: இலங்கையில் மீண்டும் பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கே, இன்று தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வருகிறார். இதையடுத்து நல்லெண்ண நடவடிக்கையாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார் ரணில் விக்ரமசிங்கே. இவர்கள் விரைவில் தமிழகம் திரும்புவார்கள்.
 
இதுகுறித்து இலங்கைப் பிரதமர் அலுவலகம் தெரிவிக்கையில்,
 
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் அமைப்பு விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மருத்துவ மற்றும் உடல் நலக் காரணங்களுக்காக 16 பேரையும் விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இன்று 3 நாள் பயணமாக இந்தியா வருகிறார் ரனில் விக்ரமசிங்கே. பிரதமரான பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணமாகும்.
 
தனது இந்தியப் பயமத்தின்போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது இந்திய மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்டும், கைது செய்யப்பட்டும் வரும் முக்கியப் பிரச்சினை குறித்தும் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
கடந்த மார்ச் மாதம் நல்லெண்ண நடவடிக்கையாக 86 இந்திய மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்தது. ஆனால் மீண்டும் பல மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்றனர்.  இந்த நிலையில் அதே மார்ச் மாதம் 54 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார்.
 
இப்படி கைதுசெய்வதும், விடுவிப்பதுமாக போக்கு காட்டி வருகிறது இலங்கை அரசு. இதற்கு நிரந்தர முற்றுப் புள்ளி வைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழக மீனவர்களின் எதிர்பார்ப்பு. மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படும் போதெல்லாம் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு உடனடியாக கடிதம் எழுதி வருகிறார். கச்சத்தீவை மீட்க வேண்டும், மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி பல கடிதங்களை எழுதியுள்ளார். ஆனாலும் மத்திய அரசு இந்த விஷயத்தில் ஒரு நிரந்தர தீர்வை இதுவரை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment