Monday, September 21, 2015

புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியது முக்கியமானது: சர்வதேச அனர்த்தக்குழு!

Monday, September 21, 2015
புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியது முக்கியமானது என சர்வதேச அனர்த்தக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் நெருங்கி செயற்பட்ட முன்னாள்
புலித் தலைவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரியுள்ளது.

குறிப்பாக குமரன் பத்மநாதன், கருணா அம்மான் உள்ளிட்ட சிரேஸ்ட புலித் தலைவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் வெளியிடப்பட்ட இலங்கை குறித்த அறிக்கையின் ஊடாக யுத்தத்தினால் ஏற்பட்ட வலி மிகுந்த காயங்களை ஆற்றுப்படுத்த வழியமைக்கும் என குறிப்பிட்டுள்ளது.விசாரணை அறிக்கையில் அனைத்து தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் நீதியை நிலைநாட்டுதல் போன்றன தொடர்பில் செய்யப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபட்ட அனைவருக்கும் நியாயமான நீதிப் பொறிமுறைமை ஒன்றின் ஊடாக தண்டனை வழங்கி மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.

இலங்கையில் மிக நீண்ட காலமாக விசாரணைகள் முழுமை பெறாத அல்லது தோல்வியடைந்த விசாரணைப் பொறிமுறைகளைக் கொண்ட வரலாறு நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

கடைநிலை பாதுகாப்பு தரப்பினர் சில நேரங்களில் தண்டிக்கப்பட்ட போதிலும், குற்றச் செயல்களுக்கு பொறுப்பான உத்தரவிட்ட, கட்டளையிட்ட வழிநடத்திய உயர் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பு அதிகாரிகள் இலங்கையில் தண்டிக்கப்பட்டதில்லை என சர்வதேச அனர்த்தக்குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment