Sunday, September 13, 2015
இந்திய மீனவர்கள் விடுதலை தொடர்பாக தமிழ் நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கு இடமில்லை. அது அவசியமும் இல்லை என்று கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இந்திய மத்திய அரசுடனான ராஜதந்திர நட்புறவுக்கமைய திங்கட்கிழமை இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படுவர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மஹிந்த அமரவீர மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்திய மீனவர்கள் எமது கடற் பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடிக்கும் போதே கைது செய்யபடுகின்றனர். எனவே, சர்வதேச கடல் எல்லைகள் தொடர்பான சட்டங்களுக்கமைய இது தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறு கடல் எல்லை மீறப்படுவதற்கு எதிராக ரூபா 15 இலட்சம் தண்டப்பணமாக அறவிட முடியும். சட்டத்தின் முன்நிறுத்தி இந்த தண்டப் பணம் அறவிட முடிவதோடு வேறு தண்டனைகளும் வழங்க முடியும்.
எமது நாட்டு மீனவர்கள் கடல் எல்லைகளை தாண்டினால் இவ்வாறான தண்டப் பணத்தை செலுத்தியே மீட்கப்படுகின்றனர். ஆனால் இந்திய மீனவர்கள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடிக்கும் போது கைது செய்யப்படுகின்றனர். அதன் போது இந்திய மத்திய அரசுடனான எமது நாட்டினதும் அரசாங்கத்தினதும் ராஜதந்திர நட்புறவு அடிப்படையில் இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். இந்திய மீனவர்கள் பிரச்சினையை தீர்ப்பதில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் உதவி தூதுவர்கள் எம்மோடு சுமுகமான பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றனர். அத்தோடு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நட்புறவுடனும் நடந்து கொள்கின்றனர்.
அத்தோடு இலங்கை அரசும் இந்திய மத்திய அரசும் ராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கின்றன. இவ்வாறானதொரு சூழ்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார். இதன்போது இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக பேச்சு வார்த்தைகள் நடத்தப்படவுள்ளது.இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படவுள்ளனர். ஆனால் கைப்பற்றப்பட்ட படகுகள், வலைகள் எதுவும் மீளக் கையளிக்கப்பட மாட்டாது. அவ்வாறு அனைத்தையும் கையளித்து மீனவர்களும் விடுதலை செய்யப்படுவார்களானால் மீண்டும் மீண்டும் இந்திய மீனவர்கள் எமது கடல் எல்லைக்கு வருவார்கள்.
இப்பிரச்சினை தொடர்பாக தமிழ் நாட்டு அரசுடனோ அல்லது அரசியல் கட்சிகளுடனோ பேச்சுவார்த்தை நடத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதற்கு அவசியமும் இல்லை.தமிழ் நாட்டில் எனக்கெதிராக ஆர்பாட்டங்கள் நடைபெற்றால் அதற்கு அஞ்சப் போவதும் இல்லை. தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் சலசலப்புக்கு எல்லாம் அஞ்சப் போவதில்லை என்றார்.
No comments:
Post a Comment