Thursday, September 3, 2015

முப்பது வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர் மகிந்த: ஜனாதிபதி புகழாரம்!

Thursday, September 03, 2015
கடந்த முப்பது வருடமாக முடிவுக்கு கொண்டு வர முடியாமல் இருந்த யுத்தத்தை சுதந்திர கட்சியின் ஆட்சியில் அதை முடிவுக்கு கொண்டு வந்தவர் மகிந்த ராஜபக்ஸ என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் இப்படி மகிந்தவை புகழ்ந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

பொலநறுவை கதிருவெல விளையாட்டு மைதானத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 64வது நிறைவு மாநாட்டில் நேற்று கலந்து கொண்டு தலைமை உரை நிகழ்த்திய போதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

 அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

 எனது பயணம் அவசரமின்றி அவதானமான ஒரு பயணமாகவே இருக்கும், ஆனால் அது வெற்றியை நோக்கிய ஒன்றாகவே இருக்கும்.

இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 64 ஆவது நிறைவு விழாவை கொண்டாடுகின்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கும்போது 63 ஆவது ஆண்டு நிறைவு விழாவை நான் மீட்டு பார்த்தேன். அது குளியாபிட்டியவில் இடம்பெற்றது.  கடந்த ஓர் ஆண்டில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கின்றன. எனினும், கடந்த ஆண்டில் ஒரே மேடையில் இருந்த அனைவரும் இன்றும் ஒரே மேடையில் இருக்கின்றோம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியை அமைப்பதற்கு மனசாட்சிக்கு ஏற்ப தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் பல உள்ளன. அதனால் அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்சியாக கட்சி முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும்.

1956ஆம் ஆண்டு முதல் இதுவரைக் காலமும் கட்சிகளுக்கு இடையில் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையிலான போட்டித் தன்மையும், வைராக்கியமும் காணப்பட்டது.

எனினும் தற்போது நாட்டின் தேவைக்கு ஏற்ப அனைத்தையும் மாற்றியமைக்கும் அவசியம் காணப்படுகிறது.

வைராக்கிய அரசியலை விட்டு கட்சியை மறுசீரமைப்புக்கு உட்படுத்தி புதியதொரு பாதையில் பயணிக்க வேண்டியை அடையாளப்படுத்தி, செய்யக் கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என்பவற்றை அறிந்துகொண்டு, புரிந்துகொண்டு முன்செல்ல வேண்டும்.

 உள்நாடு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் பிற நாடுகளுடன் ஒப்பீட்டுரீதியில் உள்ள சவால்களை சரியாக கையாள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 இந்த நிகழ்வில் ஜனாதிபதிக்கு அருகில் முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச, முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்ன, கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேராசிரியர் விஸ்வா வர்ணகுலசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, அநுரபிரியதர்ஷன யாப்பா, ஏ.எச்.எம். பௌசி, மஹிந்த சமரசிங்க, நிமல் சிறிபாலடி சில்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment