Thursday, July 23, 2015
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபயவை கொலை செய்ய எடுத்த முயற்சிகள் பற்றி தெரிந்தும் அதனை மறைத்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசூரிய, நேற்று புதன்கிழமை (22) 6 மாத கால சிறைதண்டனை விதித்தார்.
இவருக்கு எதிராக சட்டமா அதிபர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட மைத்ரி சமன குமாரவுக்கே இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி வரையான காலத்தில் கோட்டபய ராஜபக்ஷவை கொலை செய்யவென தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையினால் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.
புலிகள் அமைப்பின் அங்கத்தவர்களான இகேந்திரன் மற்றும் சுரேஷ் ஆகியோர் பற்றிய தகவல்களை மறைத்தார் என அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றவாளியாக காணப்பட்டவர், கம்பஹா மாவட்ட முன்னாள் எம்.பி ஒருவரின் அரசியல் ஆதரவாளர் ஆவார்.
குற்றவாளி ஏற்கெனவே 6 வருடங்களுக்கு மேலாக விளக்கமறியலில் இருந்து விட்டார் என்பதை கருத்தில் கொண்டு நீதிபதி, அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்தார்.

No comments:
Post a Comment