Thursday, January 8, 2015

வாக்குப்பதிவு மும்முரம்: என்றுமில்லாதவாறு மக்கள் ஆர்வம்!!

Thursday, January 08, 2015
இலங்கை::ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு உள்ளூர் நேரப்படி காலை ஏழு மணிக்குத் துவங்கியது. தற்போது நீண்ட வரிசைகளில் காத்திருந்தபடி மக்கள் வாக்களித்து வருகின்றனர்.உள்ளூர் நேரப்படி நண்பகல் வரை சுமார் 40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் திணைக்கள அதிகாரிகள் கூறுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். இந்தத் தேர்தலில் சுமார் ஒரு கோடியே 58 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
 
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் தற்போது கடும் போட்டி நிலவுகிறது. இந்தத் தேர்தலுக்கென பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக செய்யப்பட்டுள்ளன. 71,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
காலை ஆறு மணியளவிலேயே பரபரப்பாகக் காணப்படும் கொழும்பு நகரில் வாகனப் போக்குவரத்து குறைந்து காணப்படுகிறது. தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையையொட்டி, இலங்கையில் வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வாக்கு எண்ணிக்கை இன்று மாலை 7 மணியளவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கிழக்கு மாகாணத்தில் இதுவரை அமைதியான வாக்குப்பதிவு கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு சுமூகமான முறையில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
கடந்த கால தேர்தல்களை விட இந்த தேர்தலில் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்து கொள்வதை காண முடிவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறுகின்றார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தேர்தல் கண்காணிப்புகளில் ஈடுபட்டனர்.
 
ஒரு சில இடங்களில் சிறு சிறு தேர்தல் விதி முறை மீறல்கள் இடம் பெற்றிருப்பது தொடர்பாக தங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் கூறுகின்றார்கள்.
மூவின மக்களும் வாழும் கிழக்கு மாகாணத்தில் இந்த தேர்தலில் 10 இலட்சத்து 87 ஆயிரத்து 666 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள். 1163 வாக்களிப்பு நிலையங்களில் இவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment