Friday, November 14, 2014

இலங்கையில் ஜனநாயக சூழலை உருவாக்கவும் வளர்த்தெடுக்கவும் நாம் மிகுந்த பங்களிப்பை வழங்கி வருகின்றோம்: டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 14, 2014
இலங்கை::இலங்கையில் ஜனநாயக சூழலை உருவாக்கவும் வளர்த்தெடுக்கவும் நாம் மிகுந்த பங்களிப்பை வழங்கி வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் நேற்றையதினம்  இடம்பெற்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் எதைச்சொல்லி வந்தோமோ அதையே செய்து வருகின்றோம். எதைச்செய்து வருகின்றோமோ அதையே சொல்லியும் வருகின்றோம்.
 
இருந்தபோதிலும் துரதிஸ்டவசமாக எம்மைப்பற்றி திட்டமிட்டு தவறான பிரசாரங்கள் சுயலாப அரசியல்வாதிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையானது எமக்கு மிகுந்த வேதனையை தருகின்றது.
 
ஊடகங்களை பொறுத்தவரையில் மாற்றுக்கருத்துகளுக்கும் இடமளிக்கப்படவேண்டும். அதனை விடுத்து மாற்றுக்கருத்துகளுக்கு இடமளிக்காததன் காரணத்தினாலேயே எமது மக்கள் முள்ளிவாய்க்கால்வரையான துன்ப துயரங்களுக்கு உள்ளாகினர்.
 
எனவே எதிர்காலங்களிலாவது ஊடகங்கள் மாற்றுக் கருத்துகளுக்கு இடமளிக்க வேண்டும்.மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதே எமது கட்சியின் மாறாத கொள்கையாகும்.
 
அந்த வகையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பங்கெடுப்பது தொடர்பில் அமைச்சர் அவர்கள் விளக்கும் போது, யார் அதிகாரம் பெற்று வருகின்றார்களோ எமது மக்களின் பிரச்சினைக்கு யார் தீர்வு காணக்கூடியவர்களோ அவர்களுக்குத்தான் நாம் ஆதரவு வழங்கவுள்ளோம்.
 
அந்த வகையில், மகிந்த ராஜபக்ச அவர்களால் ஊடாகவே தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து அதனூடாக தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டுமென்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.
 
1987ம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் அப்போதே நாம் சுயநிர்ணய உரிமையை பெற்றிருக்க முடியும்.
 
மாகாணசபை என்பது எமது நீண்டகால கனவாக இருந்த போதிலும் அது எமது கைகளில் கிடைக்கவில்லை. மாறாக சுயலாப அரசியல் வாதிகளின் கைக்கு கிடைத்தபடியால் ஒரு வருடம் நிறைவு பெற்றுள்ளபோதிலும் அவர்களால் மக்களுக்கான வாழ்வாதார மேம்பாடுகளையோ அபிவிருத்தி செயற்திட்டங்களையோ முன்னெடுக்க முடியவில்லை. இதற்கு விருப்பமின்மையும் ஆற்றலின்மையும் பிரதான காரணங்களாக அமைந்துள்ளன.
 
எம்மை பொறுத்தவரையில் ஜனநாயக சூழலை உருவாக்கவும் வளர்த்தெடுக்கவும் அதனை பாதுகாக்கவும் நாம்மிகுந்த பங்களிப்பை வழங்கியுள்ளோம் தொடர்ந்தும் வழங்கியும் வருகின்றோம்.
 
இந்நிலையில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்கு நாம் ஒருபோதும் அனுமதியளிக்கமாட்டோம் என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்த ஊடகவியலாளர் ஒன்றுகூடலில் வடக்கு மாகாணசபைக்கென அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி தொடர்பாகவும் அந்நிதியில் வடக்கு மாகாண சபை இதுவரை செலவிட்ட நிதி விபரத்தையும் தரவுகள் அடிப்படையில் அமைச்சர் அவர்கள் விளாவாரியாக எடுத்து விளக்கினார்.

அத்துடன் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களும், ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்), வடக்கு மாகாணசபை எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா ஆகியோர் விடையளித்தனர்.

No comments:

Post a Comment