Friday, November 14, 2014

எப்போதும் யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து இயங்குகின்ற கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது: விநாயகமூர்த்தி முரளிதரன்!

Friday, November 14, 2014
இலங்கை::ப்போதும் யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து இயங்குகின்ற கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது என்று  மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட களுதாவளை கிராமத்தில் தெரிவுசெய்யப்பட்ட 300 குடும்பங்களுக்கு இலவசமாக  குழாய் மூலமான குடிநீர் இணைப்புக்கள்  இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.  களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

"அவர்களுக்கு கிழக்கு மாகாணத்தை பற்றி அக்கறை இல்லை. இவற்றை கவனத்திற்கொண்டு, எமது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது மட்டக்களப்பு மாவட்டத்துக்கு என்று ஒரு தனித்துவமான அரசியலை உருவாக்கவேண்டும். 

மேலும், கடந்தகாலங்களை போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவக் கெடுபிடிகளோ, கடத்தல்களோ, காணாமல்போவதோ கிடையாது. அவ்வாறு நடப்பதற்கு நாம் ஒருபோதும் விடமாட்டோம். கடந்த யுத்தத்தால் பல இழப்புக்களை நாம் எதிர்கொண்டோம். ஆனால், அந்த யுத்தத்தை நிறுத்தி நல்லதொரு சமாதானத்தை நான் ஏற்படுத்தித்தந்துள்ளேன். இதனால், இந்த நாட்டில் அனைத்து மக்களும் சந்தோசமாக உள்ளார்கள்.  யுத்தம் தொடர்ந்திருந்தால் இன்னும் பாரிய விளைவு ஏற்பட்டிருக்கும்.

இலங்கையில் எமது சொந்தக்காரர் எவரும் ஜனாதிபதியாக வரமாட்டார். ஆனால், சிங்களவர் ஒருவரே ஜனாதிபதியாக வருவார்.  அதிலும் வெல்லக்கூடிய வேட்பாளருக்கு எமது மக்கள் வாக்களிக்க வேண்டும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எமது தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே  வெற்றி பெறப்போகின்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிரணியில் ஒருவரும் முன்வருகின்றார்கள் இல்லை. ஐ.தே.க. தலைவர்  ரணில் விக்கிரமசிங்கவுக்கும் போட்டியிடுவதற்கு துணிவில்லை.

எமது மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்கள், கடந்த காலங்களை போன்று எதிர்க்கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்காமல், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும்.

படுவான்கரைப் பகுதியில் உள்ள 90 சதவீதமான மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  அவ்வாறே,  மட்டக்களப்பு மாவட்டத்தில் 90 சதவீதம் மின்சாரத் தேவையும் பூர்தியாக்கப்பட்டுள்ளது. நான் இந்த மாவட்டத்தில் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் யாவும் நிலைத்திருக்கக்கூடியவை. அரச வளங்களை எவ்வாறு மக்கள் மத்தியில் கொண்டு வரலாம் என்பதை  தற்போது நான் செய்து காட்டியுள்ளேன்.

4,500 மில்லியன் ரூபாய் செலவில் கித்துள் மற்றும் உறுகாமம்  குளங்களை இணைக்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது முடிவுற்றதும் கல்குடாத்தொகுதி மக்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும். 

இவ்வாறான அபிவிருத்திகள் தொடர்ச்சியாக நடைபெற வேண்டுமானால்,   மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களை தக்கவைக்கவேண்டும்.

தமிழருக்கு பிரச்சினைகள் இருக்கின்றன. தமிழரின்  பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்கவேண்டும். எமது தமிழ் மக்களை பாதுகாத்து எமது மக்களின் உரிமைகளை பெறுவதற்காக நான் அரசாங்கத்தில் உள்ளேன். இதை விட வேறு ஒரு காரணமும் இல்லை.  அபிவிருத்திகளையும் துரிதப்படுத்தவேண்டும்.

எப்போதும் அரசியல் பலத்தை உருவாக்கவேண்டும். அப்போது பாரிய பலத்தை கொண்டுவரமுடியும். எதிர்ப்பு அரசியலுக்கு எமது மக்கள் இதுவரை காலமும் வாக்களித்து வந்ததால் எந்தவித பலனும் இல்லை' எனக் கூறினார்.
 

No comments:

Post a Comment