Saturday, November 1, 2014

5 பேர் தூக்கு தண்டனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதம்: தமிழகத்தில் போராட்டம் வலுக்கிறது!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
Saturday, November 01, 2014
ராமேஸ்வரம்::இலங்கையில் ஐந்து தமிழக மீனவர்களுக்கு தூக்கு  தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரத்தில் இன்று மீனவர்கள் உண்ணாவிரதப்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையை கண்டித்து தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. இலங்கைக்கு படகில் போதைப்பொருள் கடத்தியதாக கடந்த  2011ம் ஆண்டில் இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இலங்கை வெலிக்கடை  சிறையில் 35 மாதங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக மீனவர்கள் ஐவர் உட்பட 8 பேருக்கு இலங்கை உயர் நீதிமன்றம் தூக்கு  தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தங்கச்சிமடம் மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத் மற்றும் லாங்லெட் ஆகியோரின்  தூக்கு தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக கடலோர மாவட்டங்களிலும் மீனவர்கள்  மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். ராமநாதபுரம், கன்னியாகுமரி,   தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தம் செய்ததால் 5 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு  செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டது. நாட்டுப்படகு மீனவர்களும்  ஆங்காங்கே வேலை நிறுத்தப்போராட்டம் செய்து வருகின்றனர். இன்று மாலை முதல் தமிழகத்தின்  பிறகடலோர மாவட்டங்களான புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், கடலூர், சென்னை மற்றும் காரைக்கால், புதுச்சேரி மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க  செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

 இந்நிலையில் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஐந்து மீனவர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று காலை தங்கச்சிமடத்தில் சிவகங்கை மறைமாவட்ட  ஆயர் சூசைமாணிக்கம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. ராமகிருஷ்ணபுரம் விவேகானந்தா குடில் நிர்வாகி சுவாமி பிரணவானந்தா,  தங்கச்சிமடம் முஸ்லிம் ஜமாத் தலைவர் ராஜாசாகிபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மட்டுமல்லாது மாவட்டத்தின் பிற பகுதிகளில்  இருந்தும் ஏராளமான மீனவ அமைப்பினர், பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ராமேஸ்வரத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையே உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருவது வெகுவாக குறைந்துள்ளது. மீனவர்கள் காலவரையற்ற  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ராமேஸ்வரம், பாம்பன்,  தங்கச்சிமடம்  பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 3 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட  நாட்டுப்படகுகளும் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 15 ஆயிரம் மீனவர்கள்  மீன்பிடிக்க செல்லவில்லை. ராமேஸ்வரம்,  பாம்பன் கடற்கரை துறைமுகங்களில் மீன்கம்பெனிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment