Thursday, October 30, 2014

என் மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியசாமி மனு!

Thursday, October 30, 2014
புதுடெல்லி::புலிகள் அமைப்பைச் சேர்ந்த திலீபன் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு தமிழக காவல் துறை அனுமதி அளித்தது தொடர்பாக சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துகளை வெளியிட்டு இருந்தார்.

இந்த கருத்துகள், அப்போது தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டதாக கூறி அவரது சார்பில், சென்னை மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக சுப்பிரமணியசாமி அக்டோபர் 30–ந் தேதி (நாளை) கோர்ட்டில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஏற்கனவே, மீனவர்கள் விவகாரம் குறித்து சுப்பிரமணியசாமி கூறிய கருத்துகள் தொடர்பான அவதூறு வழக்கிலும் அவர் நாளை ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தன் மீதான அவதூறு வழக்குகள் முகாந்திரம் ஏதுமற்றவை என்றும், காழ்ப்புணர்ச்சியாலும், பகை உணர்வினாலும் தாக்கல் செய்யப்பட்டவை என்றும், எனவே இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி ஒரு மனு தாக்கல் செய்தார்.

தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வில் நடந்த இந்த விசாரணையின் போது, இந்த மனுவை விசாரிக்க பிரத்யேகமாக ஒரு அமர்வுக்கு சிபாரிசு செய்வதாகவும், அந்த விசாரணை நாளை நடைபெறும் என்றும் உத்தரவு பிறக்கப்பட்டது. அப்போது சுப்பிரமணியசாமி, விசாரணைக்காக (வியாழக்கிழமை) இன்று நான் இங்கு ஆஜராவதால், சென்னை கோர்ட்டில் ஆஜராக இயலாது என்றும், இதனால் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும் கூறினார். அதற்கு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, அவ்வாறு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் சுப்ரீம் கோர்ட்டின் கவனத்துக்கு அதனை கொண்டு வரலாம் என்றும், தகுதியின் அடிப்படையில் அந்த வேண்டுகோள் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
 

No comments:

Post a Comment