Wednesday, October 29, 2014

அமெரிக்காவில் ஆளில்லா ராக்கெட் விண்ணில் வெடித்து சிதறியது!


Wednesday, October 29, 2014
வர்ஜீனியா:விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு அமெரிக்காவில் இருந்து பொருட்களை ஏற்றி சென்ற விண்கலம் ஒன்று நேற்றிரவு வெடித்து  சிதறியது. விண்வெளியில் செயல் பட்டு கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி மையத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்கலங்கள் இணைந்து செயல்பட்டு  வருகின்றன. அந்த விண்கலங்களுக்கு தேவையான பொருட்களை அமெரிக்காவில் வர்ஜீனியாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து வர்த்தக விண்கலத்தில் நாசா  அனுப்பி வைக்கும்.சர்வதேச விண்கலத்துக்கு விண்வெளி வீரர்களையும் பொருட்களையும் அனுப்பி வைக்கும் பணிகளை மேற்கொள்ள ஆர்பிடல் சயின்ஸ் மற்றும்  ஸ்பேஸ் எக்ஸ் என்ற 2 நிறுவனங்களை நாசா ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்நிலையில், ஆர்பிடல் சயின்ஸ் நிறுவனத்தின் ஆன்டேர்ஸ் என்ற 14 அடுக்குகளை கொண்ட விண்கலம் நேற்று மாலை 6.22 மணிக்கு வர்ஜீனியா மாகாணத்தில்  உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து கிளம்பியது. இந்த விண்கலத்தில் சுமார் 2,293 கிலோ எடை கொண்ட பொருட்கள் எடுத்து செல்லப்பட்டன.ரிமோட் கன்ட்ரோல்  மூலம் செயல்படும் ஆன்டேர்ஸ் விண்கலம் வானில் சீறிப் பாய்ந்த சிறிது நேரத்தில், சுமார் 8 கி.மீ. உயரத்தில் வெடித்து சிதறியது. விண்கலம் வெடித்து சிதறியதில்  யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று நாசா நேற்றிரவு செய்தி வெளியிட்டது.

ராக்கெட் ஏவுதளத்தில் விண்கலத்தை ஏவுவதற்கு முன், பலகட்ட பரிசோதனைகளை மேற்கொண்டோம். விண்கலத்தில் ஏற்றப்பட்ட பொருட்களின் அழுத்தம்  காரணமாக வெடித்து சிதறியதா என்று விசாரித்து வருகிறோம். பிற்காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும் என்று ஆர்பிடல் சயின்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் பிங்க் கல்பர்ட்சன் ஜூனியர் கூறினார்.14 அடுக்குகளைக் கொண்ட ஆன்டேர்ஸ்  தானியங்கி விண்கலம் கடந்த ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. அதன்பிறகு 3 முறை சர்வதேச விண்வெளி மையத்துக்கு தேவையான பொருட்களை வெற்றிகரமாக  ஏற்றி சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment