Saturday, September 20, 2014

அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் மர்ம நபர் புகுந்ததால் பரபரப்பு!

Saturday, September 20, 2014
வாஷிங்டன்:அமெரிக்காவில் அதிபர் பராக் ஒபாமா வசிக்கும் வெள்ளை மாளிகை வளாகத்துக்குள் மர்ம ஆசாமி புகுந்தான். இதையடுத்து, வெள்ளை மாளிகை ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவில் வாஷிங்டனில் அதிபர் வசிக்கும் மாளிகை வெள்ளை மாளிகை என அழைக்கப்படுகிறது. இந்த மாளிகை அமைந்துள்ள பகுதி மிகவும் பாதுகாப்பு நிறைந்த பகுதி. 

இங்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் இருப்பார்கள். கடந்த 2001ம் ஆண்டில் நியூயார்க்கில் இரட்டை கோபுரமாக விளங்கிய உலக வர்த்தக மையத்தை அல்கய்தா தீவிரவாதிகள் தகர்த்தனர். இதில் ஏராளமானோர் பலியாயினர். இதன்பின், ஆண்டுதோறும் செப்டம்பர் 11&ம் தேதியன்று அந்த துயரம் நினைவு கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் செப்டம்பர் 11ம் தேதி அனுசரிக்கப்பட்ட போது, முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில், அன்றிரவு வெள்ளை மாளிகையின் வடக்கு பக்க வேலியை மர்ம நபர் ஒருவர் தாண்டி குதித்தார். இதை கவனித்து விட்ட பாதுகாப்பு அதிகாரிகள் சரமாரியாக சுட்டனர். எனினும், அந்த ஆசாமி உயிர்தப்பினான். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், அதிபர் ஒபாமா தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் ஹெலிகாப்டரில் மேரிலாண்டுக்கு புறப்பட்டார். அவர் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில், வெள்ளை மாளிகை வளாகத்துக்குள் அதிகாரிகள் விடுதிகள் உள்ள பகுதியில் வேலியை தாண்டி ஒரு மர்ம ஆசாமி புகுந்து விட்டான். உடனடியாக, பாதுகாப்பு படை வீரர்களுக்கு தெரிய வந்தது. அவன் தீவிரவாதியாக இருக்கலாமோ என்ற பயத்தில் அந்த பகுதியில் இருந்த ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதன்பின், பாதுகாப்பு படையினர்தீவிர சோதனை நடத்தி அந்த ஆசாமியை பிடித்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் மர்ம நபர்கள் சர்வசாதாரணமாக புகுந்து விடுவது பாதுகாப்பு படையினருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment