Tuesday, September 30, 2014

நடிகர்-நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!

Tuesday, September 30, 2014
சென்னை::இன்று சென்னையில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக சினிமா நடிகர்-நடிகைகள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மர்ம ஆசாமி ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அ.தி.மு.க.வினர் மட்டுமின்றி பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். மாணவர்களும் தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.

தமிழ் திரையுலகினரும், ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பை கண்டித்து இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்று வரும் போராட்டத்தில் நடிகர்– நடிகைகள், உள்ளிட்ட திரைப்பட துறையினர் பங்கேற்றுள்ளனர்.

இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சினிமா செய்தி தொடர்பாளரான ராதாகண்ணனின் செல்போன் நம்பருக்கு நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் மர்ம போன் ஒன்று வந்தது.

அதில் பேசிய நபர், சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் குண்டு வெடிக்கும். எல்லோரும் மொத்தமாக போய் சேருங்கள் என்று கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ராதாகண்ணன், இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு போனில் தகவல் தெரிவித்தார். பின்னர் எந்த நம்பரில் இருந்து மிரட்டல் போன் வந்தது என்பது பற்றியும் அவர்களுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார்.

ராதாகண்ணனின் செல்போனில் பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி யார்? என்பது தெரியவில்லை. போன் நம்பரை வைத்து அவரை கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மிரட்டல் வந்த போன் நம்பர் யாருடையது. அவர் எந்த பகுதியில் வசித்து வருகிறார் என்பது பற்றி சைபர் கிரைம் போலீசார் துப்பு துலக்கியுள்ளனர்.

No comments:

Post a Comment