Thursday, August 28, 2014

இலங்கை மக்களினது தேவைகளுக்கேற்பவே இந்திய அரசு உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கி வருகின்றது: இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே சிங்ஹா!

Thursday, August 28, 2014
இலங்கை::வடக்கு மாகாண சபை மத்திய அரசுடன் இணைந்து செயற்பட வேண்டுமென இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே சிங்ஹா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையின் அங்குரார்ப்பண நிகழ்வில் (27) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார்.

நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றும் போது இவ்வாறான கைத்தொழிற்பேட்டையை ஆரம்பிப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்திய இலங்கை நாடுகளுக்கிடையே கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களிலும் சமத்துவத்தையும் ஒற்றுமையையும் காணமுடிகின்றது.

இலங்கை மக்களினது தேவைகளுக்கேற்பவே இந்திய அரசு உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கி வருகின்றது.

அந்தவகையில்தான் இலங்கை அரசினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அச்சுவேலி கைத்தொழிற்பேட்டைக்கென சுற்றுமதில், நீர் விநியோகம், மின்சாரம், கழிவகற்றும் செயற்திட்டமென இந்திய அரசு முன்னெடுத்துள்ளது.

அதுமட்டுமன்றி இக் கைத்தொழிற்பேட்டைக்கு உள்ளூரிலிருந்து மட்டுமன்றி வெளிநாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களும் முதலீடுகளைச் செய்ய முன்வர வேண்டும்.

இங்குள்ள மக்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும், மேம்படுத்தவும் இக்கைத்தொழிற்பேட்டை உதவும் என்று நான் நம்புகின்றேன்.

உள்ளூர் உற்பத்திகளை குறிப்பாக ஆடை, விவசாயம் உள்ளிட்ட துறைகள் மேம்படுத்தப்படும் அதேவேளை, இதனூடாக 2000 பேருக்கு நேரடியாகவும், 10,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை வழங்க முடியும்.

இந்திய அரசினது உதவியுடன் இலங்கையில் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவற்றில் யாழ்ப்பாணத்திற்கான புகையிரதப் பாதை புனரமைப்பு, யாழ்ப்பாணத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள கலாசார மண்டபம், பொறியியல் மற்றும் விவசாய பீடங்களின் நிர்மாணம், வீட்டுத்திட்டம், உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அவற்றின் நிதியொதுக்கீடுகள் தொடர்பிலும் விளக்கினர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இலங்கைக்கு மென்மேலும் பல உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாகத் தெரிவித்த அவர், கைத்தொழில்துறை மேம்பாட்டுக்கும் முன்னேற்றத்துக்கும் தாம் உதவத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே வடபகுதி மக்களது மேம்பாட்டுக்காக வடக்கு மாகாண சபை மத்திய அரசுடன் இணைந்து செயற்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே சிங்ஹா அவ்வாறு செயற்படும் போதுதான் இந்திய தொடர்ச்சியான பங்களிப்புக்களை வழங்க தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment