Thursday, July 31, 2014

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் இதுவரையில் பேசவில்லை:மொரிசன்!

Thursday, July, 31, 2014
இலங்கை::இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் இதுவரையில் பேசவில்லை என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தியாவிலிருந்தே அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்துள்ளனர். எனவே, இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி படகு மூலம் பயணித்த புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு அனுப்பி வைப்பது குறித்து பேசுவதில் பயனில்லை என மொரிசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வாழ்ந்து வந்த அல்லது இந்தியாவிலிருந்து புறப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களைக் கொண்ட படகே அவுஸ்திரேலியாவை வந்தடைந்தது என அவர் தெரிவித்துள்ளார். குறித்த படகில் 157 புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தப் படகில் 37 சிறுவர் சிறுமியரும் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களை மீள அழைத்துக் கொள்ளுமாறு இந்தியாவுடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதனை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். மூன்று தீர்வுத் திட்டங்களின் அடிப்படையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலிய ஒரேஞ் பாதுகாப்பு படகுகளின் மூலமாக புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டதாக என்ற கேள்விக்கு நேரிடையான பதில்கள் எதனையும் மொரிசன் வெளியிடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களின் புகலிடக் கோரிக்கைகள் அவுஸ்திரேலியாவிற்குள் அவர்களை தங்க வைத்துக் கொண்டு பரிசீலனை செய்யப்படாது என அவர் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் குடியேற்றப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment